இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

26 ஜூன், 2020

கல்வியில் விடி



அண்ணன் அறிவுமதி அவர்களின்
இந்த கவிதையைத்
தலைப்பாகக் கொண்டு விருத்தாசலம்
செந்தில் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு
நிகழ்த்திய
இணைய உரை

https://youtu.be/KYH7_-YvSaghttps://youtu.be/KYH7_-YvSag

14 பிப்ரவரி, 2019

ஆந்திராவில் திருமணம்



மகளின் தோழிக்கு குண்டூரில் திருமணம். துணைக்கு செல்லவேண்டிய நிலை. திருமணம் இரவில்தான் . காலை நலங்கு. இது கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. பனை ஓலையால் ஆன பந்தலில் மணப்பெண்ணுக்கு நலங்கு வைத்தனர். வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் ஒருவர் காலில் மஞ்சள் பூசிவிட்டார், இன்னொரு பெண் கழுத்தில் சந்தனம் தடவினார், மற்றொரு பெண் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டார். நலங்கு செய்தவர்களில் ஒருசிலர் மணமகளுக்கு ரவிக்கைத் துணியும் கொய்யாப் பழமும் அன்பளிப்பாக வழங்கினர். மணமகளுக்கு பக்கத்தில் ஒரு குழந்தையை அமர்த்தி அக்குழந்தைக்கும் அனைத்து சடங்குகளையும் செய்தனர். ஒவ்வொருவரும் மஞ்சள் பூசிய அரிசியை மணமகளின் தலையில் இட்டு வாழ்த்தினர். நிறைவாகப் பெண்கள் நலங்குப் பாடல்கள் பாடி பெண்ணை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

6 ஜனவரி, 2019

மினுசுதார் வீடு







முன்னுரை:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் (தற்போது திருமுட்டம் வட்டம்) மருங்கூர் கிராமத்தில் மினுசுதார் வீதியில் அமைந்துள்ள 50 அடி நீளம், 34அடி அகலமுள்ள சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுக்கட்டு வீடாக அமைந்துள்ள மினுசுதார் வீடு, முழுக்க முழுக்க உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு ஆகும். அந்த வீடு நூறு ஆண்டுகளைக்கடந்தும் நிலைத்திருப்பதற்கான தொழில்நுட்பம் என்ன என்பதை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
பெயர்க் காரணம்:
மினுசுதார் வீடு என்பது மக்களால் சூட்டப்பட்ட பெயர் ஆகும். வீட்டு உரிமையாளர்களால் வைக்கப்பட்ட பெயர் அல்ல. அந்த வீட்டின் உரிமையாளரான குழந்தைவேல் காலிங்கராயர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராம முனுசீப் ஆக பணியாற்றியவர் என்பதால் அவர் வீட்டை மக்கள் முன்சீப்தாரர் வீடு என அழைத்துள்ளனர் அது காலப்போக்கிலும் பேச்சு வழக்கிலும் மினுசுதார் வீடு என தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வீடு அமைந்திருக்கும் தெரு மினுசுதார் வீதி என்றே அழைக்கப்படுகிறது. மினிஸ்ட்ரார் என்ற பதவி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததாகவும் அப்பதவியை அவர் வகித்ததால் அப்பெயர் வந்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.
வீடு அமைப்பு:
தெற்கு பார்த்து கட்டப்பட்ட ( தெக்கு பாத்த வீட்டுக்கு லெக்கு பாத்து காத்து வரும் என்பது நாட்டுப்புற வழக்கு) இவ்வீட்டின் படிக்கட்டுகளின் இருபுறமும் சுமார் 4 அடி உயரமுள்ள மதில் எழுப்பப்பட்டுள்ளது ( இது சிறு திண்ணை போல் அமைந்திருக்கும்) படிக்கட்டு முடியுமிடத்தில் நடைப் பகுதி நடையின் இரு புறமும் பெரிய திண்ணைகள் அமைந்துள்ளன. திண்ணை முடியுமிடத்தில் நுழைவாயில் அமைந்துள்ளது. சூரியப்பலகையில் அன்னக்கிளியும் யாளி உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. (யாளி உருவம் வீட்டில் இருக்கக் கூடாது என யாரோ கூற தற்போது அந்த உருவம் அகற்றப்பட்டுள்ளது) அருகாலின் இரு புறமும் சுவரில் விளக்கேற்றும் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருகாலின் மேல் பலகை அமைப்பதற்கு ஏதுவாக இரு தண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மீது மந்தாங்கி பலகை அல்லது பந்தல் பலகை அமிந்துள்ளது. இது பாய் தலையணையை வைப்பதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது.  ஒற்றைக்கதவு நாதாங்கி உளதாழ்ப்பாளோடு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கூடமும் தாழ்வாரமும் உள்ளன சதுர வடிவ உள் வாசலைச் (முற்றம்) சுற்றிலும் அமைதிருப்பது தாழ்வாரம் தாழ்வாரத்தின் வெளிப் பகுதியில் மூன்று அறைகள் உள்ளன. வீட்டின் பின் பகுதியில் சாரம் அமைத்து அதில் தோட்டத்து வாயில்படி அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப்பொருள்கள்:
செங்கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டுள்ளது, பூவரசு, வேம்பு, பனை, மூங்கில் போன்ற மரங்களிலிருந்து முறையே அருகால், கதவு,விட்டம்,வாரை, கம்பி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. மேற்கூரை நாட்டு ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பின்பற்றப்பட்டுள்ள நுட்பங்கள்:
வீட்டின் சுவர்கள் 15 அடி உயரம் 2அடி அகலம் உள்ளன இவை கோடைக்காலத்தில் வெப்பத்தையும் குளிர்காலத்தில் குளிரையும் வீட்டுக்குள் கடத்துவதில்லை. எனவே எல்லா பருவங்களுக்கும் குடியிருக்க ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஓடுகள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் சூரிய வெப்பம் எளிதில் வீட்டுக்குள் தாக்காது. கோடைக்கலத்தில் மாலைப்பொழுதில் வீடு குளிர்ந்துவிடும். சன்னல்கள் ஏதும் இல்லை என்பதால் வெளிச்சமும் காற்றும் வரும் வண்ணம் சுவருக்கும் மேற்கூரைக்கும் இடையே விட்டம் அமைத்து இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது ஓடுகளுக்கு இடையே கண்ணாடிகள் அமைக்கப்பட்டு வெளிச்சம் கூடுதலாகக் கிடைக்கும்படி இக்கட்டுரையாளரின் தந்தை அமைத்துள்ளார். உள் வாசல் வழியாகவும் காற்றும் வெளிச்சமும் வரும். பனை வாரைகளை மட்காமலும் பூச்சித் தாக்காமலும் தடுக்கும் பொருட்டு உப்பனாற்றில் ஊரவைத்து பயன்படுத்தப்பட்டுள்ளன. மழை நாட்களில் வெள்ள நீர் வீட்டுக்குள் நுழையா வண்ணம் மிகவும் உயரமாகக் கட்டப்பட்டுள்ளது. (அந்த ஊரின் உயரமான வீடு இதுவே). நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவ்வூரை வெள்ளம் சூழ்ந்தபோது வீட்டின் உரிமையாளரின் வயலில் கத்தரி மேடு என்ற பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் இருப்பதைப் பார்த்து அந்த உயரத்திற்கு வீட்டை உயர்த்திக் கட்டியதாக குடும்பத்தில் தற்போது மூத்தவரான திரு. தனபால் கூறினார்.
மழைநீர் சேகரிப்பு:
முற்றத்தின் நான்கு முனைகளிலும் ஓடுகள் கூடுமிடத்தை கூடுவாய் என்று குறிப்பிடுகின்றனர். கூடுவாயில் உள்புறம் அமைக்கப்பட்டுள்ள ஓடுகள் மற்ற ஓடுகளைவிட அளவில் பெரிதானவை. மழை நாட்களில் கூடுவாய் வழியே அதிக அளவில் நீர் வாசலில் ஊற்றும். அந்த நீரை பெரிய கொப்பரைகளில் சேகரித்து துணி துவைக்க, பாத்திரம் விளக்க, குளிக்க என பலவகையில் பயன்படுத்துவது இந்த வீட்டின் நூற்றாண்டுகால வழக்கம். மழை நீர் தூய்மையான நீர் என்பதை இக்கட்டுரையாளர் குளித்தும் குடித்தும் அறிந்துகொண்டவர்.
கழிவுநீர் மேலாண்மை:
இவ்வீட்டில் கழிவுநீர் மேலாண்மை மிகச்சிறப்பாக பின்பற்றப்படுகிறது. முற்றத்திலிருந்து நீர் வெளியேறும் பொருட்டு கற்குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன குளிக்கும் நீரும் பாத்திரம் விளக்கும் நீரும் இதன் வழியே வெளியேறும். அந்த நீர் தோட்டத்திலுள்ள தாவரங்களுக்கும் மரங்களுக்கும் பயன்படும். சமைக்கும்போது ஏற்படும் கழுநீர், கஞ்சித்தண்ணி ஆகியவற்றை அடுப்பங்கரையிலுள்ள கழுநீர்ப் பானையில் சேகரித்து அவை ஒவ்வுருநாளும் முற்றத்திலுள்ள தொட்டிப்பானைக்கு மாற்றப்படும். தொட்டிப்பானை நிரம்பியதும் அந்த நீர் தொட்டியில் ஊற்றப்பட்டு மாடுகள் குடிக்க பயன்படுத்தப்படும். கழிவு நீர் ஒருபோடும் சாக்கடையாவதில்லை.
கழிவரை:
இந்த வீட்டில் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கழிவரை இல்லை. ஆண்கள் விளை நிலங்களிலும் பெண்கள் குப்பை மேட்டிலும் காலைக் கடன்களைக் கழித்து வந்தனர். அதிகாலை எழும் வழக்கம் இருந்தமையால் இது ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. இக்கட்டுரையாளர் நகரத்தில் திருமணம் செய்தமையால் வீட்டின் தோட்டத்தில் இவ்வூரின் முதல் கழிவரையைக் கட்டினார். இன்று கழிவரை இல்லாத வீடுகள் இவ்வூரில் இல்லை.

உள்ளூர் வளங்கள்:
இந்த வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது என்பதே இதன் சிறப்பு. இன்று வீடு கட்டுவதற்கு அனைத்துப் பொருள்களும் ( கல்,கருங்கல்,இரும்பு, மரம்,சிமெண்ட்) நகரத்திலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இவ்வீட்டுக்குத் தேவையான செங்கல், ஓடு ஆகியவற்றை உள்ளூரிலேயே சூளை அமைத்து தயாரித்துள்ளனர். மரங்களை தோட்டத்திலிருந்து வெட்டி உள்ளூரிலேயே அதனை விட்டமாகவும் பலகையாகவும் அறுத்துள்ளனர். பலகை அறுப்பத்தற்காக கிணறு போன்ற  நிரந்தர அமைப்பு  ஊரில் இருந்துள்ளது. செங்கற்களை புளிக்க வைத்த களிமண் கொண்டு கட்டி சுவர் எழுப்பியுள்ளனர்.
புதுப்பித்தல்:
இவ்வீட்டில் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓடுகளை மாற்றி அடுக்குவது வழக்கம் அப்போது சேதமடைந்திருக்கும் வாரைகளையோ கம்பிகளையோ மாற்றி அவ்வப்போது வீட்டினைப் பராமரித்து வந்துள்ளனர். இதனால் வீட்டின் ஆயுள்காலம் அதிகரிக்கிறது.மரபு வழி தொழில்நுட்பத்தின் தனித்தன்மையே பரமரிக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டிருப்பதும் ஒன்றாகும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வீட்டின் உரிமையாளர் குழந்தைவேல் அவர்கள் உடல் நலமின்றி நீண்ட நாட்கள் படுக்கையில் விழுந்தமையால் சிறிது காலம் வீட்டைப் பராமரிக்காமல் விட்டுவிட்டார். அப்போது வீட்டின் பின் பகுதி சேதமடைந்தது. வீட்டின் மூத்த மகன் திரு.தனபால் அவர்களுக்கு அப்போது 15 வயது இருக்கும் அவர் அப்பாவின் மறைவுக்குப் பிறகு வீட்டின் பின் பகுதியை முற்றிலுமாக புதுப்பித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மழைக்காலத்தில் வீட்டின சாரம் சரிந்து விட இக்கட்டுரையாளரின் தந்தை திரு.இரத்தினசபாபதி அவர்கள் சிமெண்ட் சுவர் எழுப்பி அதனை சரிசெய்தார். தற்போது வீட்டின் முன்பகுதியிலுள்ள நூறு ஆண்டுகளைக் கடந்த பனை வாரைகள் ஒவ்வொன்றாக மட்கி உதிரத்தொடங்கியுள்ளன. அத்னை மாற்றுவதற்கு பொருள்செலவு மிகுதியாகும் என்பதால் இவ்வீட்டை இன்னமும் தொடர்ந்து பராமரிக்கவேண்டுமா? என்று இக்கட்டுரையளரும் அவரின் சகோதரரும் கருதுகின்றனர்.

கூட்டுக் குடும்ப முறை:
இவ்வீட்டில் மூன்று சகோதரர்கள் தனித்தனியே வசித்தாலும் கூட்டுக்குடும்ப முறை பின்பற்றப்பட்டு வந்தது. பொங்கல் திருநாளன்று மூவரும் சேர்ந்தே முற்றத்தில் சூரிய வழிபாடு செய்வார்கள். நிலத்தில் பயிர் வைப்பதற்கும் வீட்டைப்பராமரிப்பதற்கும் மூத்தவரின் ஆலோசனைப்படி தம்பிகள் இருவரும் நடந்து வந்தனர். காலப்போக்கில் அவரவர் தனிக்குடித்தனம் சென்றதிலிருந்து சில ஆண்டுகளாக வீடு பராமரிப்பு வேண்டி நிற்கிறது. தொடந்து பராமரித்தால் இன்னும் பல ஆண்டுகள் இவ்வீடு நிலைத்திருக்கும்.
முடிவுரை:
மரபுவழி தொழில்நுட்பம் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. தொடர்ந்து பராமரிக்கும் வண்ணம் அமைந்துள்ளதால் வீட்டின் ஆயுள் அதிகரிக்கிறது. நமது தட்ப வெப்பத்திற்கு ஏற்ற கட்டுமானமாகவும் அமைந்துள்ளது. அப்போது மரங்கள் அதிக அளவில் கிடைத்ததால் நிறைய மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். மரங்களை தொடர்ந்து வளர்ப்பதும் பாதுகாப்பதும் தேவைப்படும்போது வெட்டுவதும் மீண்டும் மரங்களை வளர்ப்பதும் அவர்களின் வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. அந்த மரபில் வந்த இக்கட்டுரையாளர் வீடு கட்டுவதற்காக 10 மரங்களை வெட்டினாலும் இன்று 500 மரங்களை வளர்த்து வருகிறார். இப்படி இயற்கை சம நிலையை ஒவ்வொருவரும் பின்பற்றினால் சுற்றுச்சூழல் காப்பாற்றபடும் என்பது திண்ணம்.
தகவலாளர்கள்:
1.திரு.கு.தனபால், 82, மருங்கூர், திருமுட்டம் வட்டம், கடலூர் மாவட்டம், 2.12.2018
2.திரு.கு.ராசலிங்கம்,78, மருங்கூர், திருமுட்டம் வட்டம், கடலூர் மாவட்டம், 9.12.2018
3.திரு.அ.ராமலிங்கம்,85, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்,10.12.2018
4.திரு. வேலாயுதம், 65,தச்சர், விருத்தாசலம்,12.12.2018

8 அக்டோபர், 2018

காந்தியின் கல்விக்கொள்கைகள்




            காந்தியின் பல கொள்கைகள் இன்றும் சிலரால் பின்பற்றப் பட்டாலும்,  கடுமையான விமர்சனங்களை முன் வைத்து காந்தியக் கொள்கைகளை எதிர்ப்பவர்களும் உண்டு. ஆனால் காந்தியின் கல்விக் கொள்கைகளை நம் நாடு கண்டுகொள்ளமல் விட்டது நமக்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் கூறவேண்டும். காந்தியின் ஆதாரக் கல்விக் கொள்கை நம் மண்ணுக்காக சிந்தித்தது. நமக்கான தற்சார்பை வலியுறுத்தியது. முதல் பிரதமரான நேரு இக்கொள்கையை வளர்த்தெடுத்திருந்தால் நம் நாட்டுக் கல்விமுறை மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும். ஆனால் நேரு அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆதாரக் கல்வித்திட்டத்தை நழுவ விட்டார்.
கல்வி குறித்து காந்தியின் விளக்கம்: 
            கல்வி என்பது பாட நூல்கள் வாயிலாகப் பெறுவது என்கிற எண்ணம் பல பெற்றோர்களிடம் நிலவுகிறது. இந்த சிந்தனையை காந்தி மறுதலித்தார். பாட நூல்கள் மூலமாகவே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில், ஆசிரியர்களின் சொற்களுக்கு மதிப்பற்றுப் போய்விடும். பாட நூல்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர், அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது” என்றார்.
ஒருவர் கற்கும் கல்வி அவர் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதனால்தான்  ‘வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்பதை  காந்தி வலியுறுத்தினார்.  காந்தியக் கல்வியின் அடிப்படையே, தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதேயாகும்.
காந்தியக் கல்வியின் கூறுகள்
காந்தியக் கல்வி ஆறு முதன்மைப் பகுதிகளைக் கொண்டது.
1)ஏழாண்டு ஆதாரக் கல்வியை இலவசமாக அரசே தரத்தோடு வழங்க வேண்டும்.
2) ஆதாரக் கல்வியானது முழுக்க முழுக்கத் தாய்மொழிவழிக் கல்வியாக இருக்கவேண்டும். 3)கைத்தொழில் மூலமோ, ஆக்கப்பணி மூலமோ கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.
4) பள்ளியின் சட்ட திட்டங்களிலிருந்து தாங்கள் கற்க வேண்டிய தொழில் உட்பட மாணவர்களே தீர்மானித்து சுயக்கட்டுப்பாட்டுடன் ஒரு சமூகமாகப் பள்ளியை வழிநடத்துவார்கள்.
5)தங்களது சூழலோடு பொருந்துகிற கல்வி 
6)குடிமைப் பயிற்சி. நாட்டின் உயர்ந்த லட்சியங்களாகக் காந்தி கருதிய மதச்சார்பின்மை, வாய்மை, நேர்மை, பொது வாழ்வியல், சமுதாயப் பங்கேற்பு, அகிம்சை வழியில் உரிமைகளைப் பெறும் வழிகளை அறிதல் என அவரது கல்வி விரிவடைகிறது.
            இவை அனைத்துமே இன்றைக்கும் சமூகத்திற்கு பயனுள்ளவையாக, தேவைப் படுவனவாக உள்ளன என்பது வியப்பளிக்கும் உண்மை. இவற்றையெல்லாம் கொள்கை அளவில் மட்டும் கூறி விட்டுவிடாமல்  நடைமுறைப்படுத்தி சோதித்தும் பார்த்தார் காந்தி.
காந்தியின் கல்விச் சோதனைகள்:
காந்தியின் முதல் கல்விச் சோதனை தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை ஆசிரமத்தில் தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து 1915 இல் இந்தியா திரும்பியவர் அன்றைய இந்தியக் கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதினார். அதன் விளைவாக, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி 1917 இல் அகமதாபாத்தில் தன்னுடைய அடிப்படைக் கல்வி மற்றும் புதிய கல்வி எனும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளைத் தொடங்கினார். இதே போன்று 1921 இல் குஜராத் வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார்.  விடுதலைப்போராட்டம் தீவிரமான காலத்தில் சேவாகிராமத்தில் வாழ்ந்தபோது, ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் பலவீனங்களைப் பின் வருமாறு பட்டியலிட்டிருந்தார்.
·         நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இந்த மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.
·         இந்தக் கல்வி, குழந்தையை நேரடியான சமுதாயச் சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்துவிடுகிறது.
·         கற்றவர்களைத் தனி இனமாக, பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கிவிட்டது.
·         அரசு மற்றும் தனியாருக்குப் பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சியை மட்டுமே இன்றைய கல்வி  வழங்குகிறது.
·         மாணவர்களின் மனத்தில் சமுதாய உணர்வு இன்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்துவிட்டது.
·         ஒரு நூற்றாண்டாகத் தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப் பள்ளி என்பது எந்த முன்னேற்றமுமின்றி வதங்கிவிட்டது.
·         கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக வீணானதாக உள்ளது.
·         பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப்பார்ப்பதே கிடையாது.
·         இயந்திர முறையில் ஒரே மாதிரி கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் - அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள்.
·         கல்விமுறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கிப் பெரிய சுமையாகவே மாற்றிவிடுகிறது.
என்று இந்தியக் கல்வி குறித்து கடுமையான அதே நேரத்தில் உண்மையான குற்றச்சாட்டுகளை அக்கட்டுரை முன் வைத்தது.
பின்னர் காந்தி 1937 அக்டோபர் 22 இல் வார்தாவில் தேசிய கல்வி மாநாட்டை கூட்டினார். அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. வார்தா கல்வித் திட்டம் அல்லது ஆதாரக் கல்விக் கொள்கை அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது. பிறகு வர்தாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. காந்தியின் மரணத்திற்குப் பிறகு அடிப்படை கல்வி மற்றும் முன்-அடிப்படை கல்விப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
மாற்றுக் கல்வியின் தேவை:
            நடுவண் அரசு அமைத்த தேசிய திட்ட ஆணையம் பல அடிப்படைகளில் காந்தியின் அடிப்படை கல்வி பார்வைக்கு எதிர்ப்பைப் தெரிவித்தது. நேருவின் அரசின் பார்வையானது நாட்டை தொழில்மயமாக்குவதையும், மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரத்தையும் கொண்டதாக இருந்ததால், இதில் காந்தியின் 'ஆதாரக் கல்வி' அல்லது சுய-ஆதரவு பள்ளிகளுக்கு இடமின்றி போனது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர அறிவுஜீவிகளாளலும், அரசியல் தலைவர்களாளும் வலியுறுத்தப்பட்டதால் நவீன கல்வி என்று கருதும் இன்றைய கல்விமுறை நம் நாட்டில் பின்பற்றப் படுகிறது. ஆனால் மீண்டும் நம் கல்விமுறை மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் காந்தியின் கல்விக்கொள்கைகள் நமக்கு உறுதியாகத் தேவைப்படும்.

நன்றி: குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி