இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

19 ஏப்ரல், 2009

ஈழத்தமிழர்களைக் காக்க கடவுளிடம் புகார் கொடுத்த படைப்பாளிகள்





போரில் செத்து மடியும் அப்பாவி ஈழத்தமிழர்களைக்காக்க வேண்டி தமிழகத்தில் நாள்தோறும் வெவ்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் விருத்தாசலத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டம் இது வரை எங்கும் நடக்காத ஒரு போராட்டம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பாமர மக்களைத் தூண்டுவதே இப் போராட்டத்தின் நோக்கம். நாட்டுப்புற மக்களிடையே சில நம்பிக்கைகள் காலகாலமாகப் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மூட நம்பிக்கை என நாம் எளிதில் புறம்தள்ளிவிடலாம் ஆனால் அம்மக்கள் அவற்றை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட மாட்டார்கள். அம்மக்களின் உள் மனதில் புதைந்து கிடக்கும் அத்தகைய ஒரு நம்பிக்கையை போராட்ட வடிவமாக்கியிருக்கின்றனர் படைப்பாளிகள். தமக்குத் துன்பம் தரும் ஒருவரை எதிர்ப்பதற்கோ தண்டிப்பதற்கோ மனிதர்களுக்கு உரிய அனைத்து வழிகளாலும் இயலாத போது நாட்டுப்புற மக்கள் நாடக்கூடிய கடைசி புகலிடம் அவர்களின் குல தெய்வம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி இந்த நம்பிக்கை சார்ந்ததுதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தவறுசெய்தவர்களைத் தண்டிக்கவேண்டி குல தெய்வக்கோயிலில் சீட்டு எழுதி கட்டுவர். அவர்கள் நம்பிய படி தவறு செய்தவருக்கு உரிய தண்டனை கிடைத்ததும் கோயிலில் கட்டிய சீட்டை காணிக்கை செலுத்தி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் சீட்டு கட்டியவரையே கடவுள் தண்டிப்பார் என்பது நம்பிக்கை. இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை உலகெங்கும் உள்ள மக்கள் சக்தியால் தடுத்து நிறுத்த இயலாத நிலையில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவனாவது ராசபக்சேவை தண்டிக்கட்டும் என்கிற தொனியில்தான் இப்போராட்டம் நடந்துள்ளது. விருத்தாசலத்தின் தெற்கே மூன்று கல் தொலைவில் உள்ளது வேடப்பர் கோயில் துட்டதெய்வம் எனக்கருதி மக்கள் இதனை பய பக்தியோடு வழிபடுவர் சாலையில் செல்லும் ஊர்தி ஓட்டிகளில் பெரும்பாலானோர் வேடப்பர் கோயிலுக்கருகில் செல்லும் போது ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி சூடம் கொளுத்தி கும்பிட்டுவிட்டுத்தான் கடந்து செல்வர். விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்களுக்கு இது குல தெய்வம் நினைத்தது நடக்கவேண்டி சீட்டு எழுதி கட்டும் வழக்கம் இன்றும் இங்கு நடைமுறையில் உள்ளது.கடவுளுக்கு கொடுக்க வேண்டிய புகார் மனுவைத் தாளில் எழுதி பூசாரியிடம் கொடுக்க அதை அவர் பனை ஓலையில் எழுதி சீட்டையும் ஓலையையும் வட்ட வடிவில் வளையல் போல சுற்றி தெய்வத்தின் முன் வைத்து படைத்து புகார் கொடுக்க வந்தவரிடமே கொடுத்து சூலத்தில் மாட்டச் செய்வார். இதைத்தான் படைப்பாளிகளும் செய்தனர்.விருத்தாசலம் பாலக்கரையிலிருந்து பம்பை இசை முழங்க ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகள் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையைப் பற்றி உறுக்கமாக பாடிய படி ஊர்வலமாக வேடப்பர் கோயிலுக்குச் சென்று சீட்டு எழுதி கட்டினர்.அவர்கள் கடவுளிடம் கொடுத்த புகார் மனு இதுதான் " நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2040 சித்திரைத் திங்கள் 2 ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் அருள் மிகு வேடப்பரை குலதெய்வமாகக் கொண்ட நாங்கள், தங்களுக்கு எழுதிக்கொள்ளும் பிராது. நமது தமிழ் உறவுகளாகிய அப்பாவி ஈழத் தமிழர்களை நச்சுக் குண்டு வீசி கொடூரமாகக் கொன்று குவித்து வரும் கொலைகாரன் ராசபக்சேவையும் சரத் பொன்சேகாவையும் தண்டித்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு வேண்டி இச்சீட்டினைத் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். இதற்கு படிக்கட்டணமாக ரூ.11 செலுத்திவிடுகிறோம். தாங்கள் தண்டனையை உறுதியாக நிறைவேற்றியதும் அதற்கு பரிகாரமாகப் படிக்கட்டணமும் சிறப்பும் செய்து புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்". இந்த புகார் மனுவை படைப்பாளிகள் சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் ஆதித்யாசெல்வம் கொடுக்க படைப்பாளிகள் கண்மணிகுணசீகரன், தங்கவெங்கடேசன், தெய்வசிகாமணி, ஆறு.இளங்கோவன், புதூர்சாமி,மணிவண்ணன்,செம்புலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் செல்லும்போது உடுக்கை இசை கேட்டு ஆவேசமாக ஆடி ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தைக் கவர்ந்தார். இது போல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிறு தெய்வக் கோயில்களிலும் சீட்டு எழுதி கட்டும் போராட்டம் தொடரும் என படைப்பாளிகள் பேரியக்க நிருவாகிகள் தெரிவித்தனர். காண்க தமிழ் ஓசை களஞ்சியம்

14 ஏப்ரல், 2009

ராசபக்சேவுக்கு சாமிதான் தண்டனை கொடுக்கவேண்டும்.

"அருள்மிகு வேட்ப்பர் துணை"

கொலைகாரன் ராசபக்சேவுக்கு தண்டனை வேண்டி வேடப்பர் கோயிலில் சீட்டு எழுதிகட்டிய படைப்பளிகள்.
நாட்டுப்புற மக்கள் தங்களுக்கு நேரும் துன்பங்களைக் கேட்பாரற்ற போது தங்களின் குல தெய்வத்திடம் சீட்டு எழுதிக்கட்டுவது மரபு.அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களை தெய்வம் தண்டிக்கும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பின்பற்றி தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் கொலைகார ராசப்க்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுக்க வேண்டி வேடப்பர் கோயிலில் தமிழ்ப் படைப்பளிகள் பேரியக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சீட்டு எழுதி கட்டியுள்ளனர். அதன் விவரம் பின் வருமாறு. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் அருள்மிகு வேடப்பரைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில் நாங்கள்,தாங்களுக்கு நாளது தேதியில் எழுதிக்கொள்ளும் பிராது. எங்களின் தமிழின உறவுகளாகிய அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நச்சுக்குண்டு வீசி கொன்று குவித்து வரும் ராசபக்சேவையும் சரத் பொன்சேகாவையும் மாறு கால் மாறு கை வாங்கி தண்டனை கொடுக்குமாறு வேண்டி இச்சீட்டினைத் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். இது எங்களின் கடைசி நம்பிக்கை, ஏனென்றால் நாங்கள் யார் யாரையோ நம்பினோம் அவர்கள் எல்லோரும் எங்களை கைவிட்ட நிலையில் தங்களை மட்டுமே ஈழத்தமிழ் மக்களைக்காக்கும் கடைசி ஆதாரமாக நாங்கள் நம்புகிறோம். எஙள் நம்பிக்கை வீண் போகாமல் கொலைகார ராசபக்சேவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் தக்க தண்டனை கொடுத்து அப்பாவி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு படிக்கட்டணமாக ரூ.10 செலுத்திவிடுகிறோம். தண்டனையைத் தாங்கள் உறுதியாக நிறைவேற்றும் நிலையில் உடன் நாங்கள் அதற்கு பரிகாரமாக படிக்கட்டணம் மற்றும் சிறப்பு கொடுத்து பிராதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு,தங்களைக் குலதெய்வமாகக் கொண்ட மக்களின் சார்பில்கடலூர் மாவட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க நிர்வாகிகள்.
கோ.தெய்வசிகாமணி,
இரத்தின புகழேந்தி,
கோவிந்தன்,
கண்மணிகுணசேகரன்,
சி.சுந்தரபாண்டியன்,
அன்பாதவன்,
ஆறு.இளங்கோவன்,
மா.துரைராசு,
இராம.அசோகன்,
புதூர் சாமி,
சீவாசெந்தில்,
தங்க.வெங்கடேசன்,
அரங்க.வேணுநாதன்,
சிவராமகிருட்டிணன்,
கு.தமிழாகரன்,பூமாலைமணிவண்ணன்,
காமராசு,திருமாறன்,
செம்புலிங்கம்,
செகநாதன்.
..

12 ஏப்ரல், 2009

வண்ண மயமாகும் பணபாட்டு அசைவுகள்

ஓவியர் தட்சணாமூர்த்தி










நவீன ஓவியங்களை அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது என்கிற கருத்து கலை உலகில் நிலவி வருகிறது.இத்தகைய ஓவியங்களை வரையும் ஓவியர்கள், மனித வாழ்க்கை இன்று சிக்கல் நிறைந்ததாக, புரிந்து கொள்ள இயலாததாக உள்ளது அதுதான் எங்கள் ஓவியங்களில் வெளிப்படுகிறது என்கின்றனர். இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும் எளிய மக்களுக்கு நவீன ஓவியங்கள் புரிந்துகொள்ள இயலாதவையாகத்தான் உள்ளன என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஓவியங்களை வரையும் நவீன ஓவியர்களும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர்தான் ஓவியர் தட்சணாமூர்த்தி. 1954 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகிலுள்ள நல்லூரில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஓவியத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்த இவர் ஓவியர் கோவிந்தனின் வகுப்புத் தோழர். தொடக்கக் கல்வியை நல்லூரிலும், பள்ளிக்கல்வியை அருகிலுள்ள புதுப்பேட்டையிலும் முடித்த ஓவியருக்கு சிறு வயதிலேயே ஓவியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அதற்குக் காரணம், பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்களும் பண்ணுருட்டி பகுதியில் சிறு வயதில் பார்த்த வண்ணப் பதாகைகளும்தான். ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகு அங்கிருந்த பேராசிரியர்கள் அல்போன்சா, கன்னியப்பன், சந்திரசேகரன், சானகிராமன், முனுசாமி ஆகியோரின் வழிகாட்டுதல் மிகுந்த உற்சாகத்தைத் தரவே ஓவித்தின் மீதான ஈடுபாடு அதிகரித்தது. அது போலவே சுடுமண் சிற்பங்கள் செய்வதிலும் கை தேர்ந்தவராக விளங்கும் ஓவியர் இன்றும் தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரது ஓவியங்களைப் பார்த்ததும் இவை தட்சணாமூர்த்தி வரைந்தவை எனக் கூறுமளவிற்குத் தனித்தன்மை வாய்ந்தவை. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களை ஓவியங்களில் இவர் வடிக்கும் போது அந்த நடனங்களின் ஒயிலான அடவுகளையும் வேகமான அசைவுகளையும் மிக நுட்பமாக வெளிப்படுத்துவார். ஆட்டக்கலைஞர் அணிந்திருக்கும் ஆடை காற்றில் அலைவதை இயல்பாக ஓவியத்தில் பதிவு செய்வது தட்சணாமூர்த்தியின் தனித்தன்மை. கோட்டோவியங்கள் வரைவதிலும் வல்லவர். பல்வேறு இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாகக் கணையாழி, எக்கனாமிக் டைம்ஸ், அலைவ் போன்ற இதழ்களில் அதிகம் வெளியாகி யிருக்கின்றன. இவர் தம் நண்பர்களோடு சேர்ந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார். சென்னை, புதுவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஓவிய முகாம்களில் பங்கேற்றிருக்கிறார். சென்னையிலும் கொச்சியிலும் இதுவரை பதினொரு முறை தனிநபர் ஓவியக்கண்காட்சி நடத்தியிருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல வெளிநாடுகளிலும் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். 1990 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பங்கேற்று சிறந்த ஓவியர் விருது பெற்றுள்ளார். நீர் வண்ணம், தைல வண்ணம், அக்ரிலிக் எனப்படும் நவீன வண்ணம் ஆகிய வண்ணங்களில் ஓவியம் தீட்டும் இவர் கணினியைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதில்லை. கேன்வாஸ் எனப்படும் துணியில் தூரிகையைக்கொண்டு வரைவதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி கணினியில் வரையும்போது கிடைப்பதில்லை, மேலும் வண்ணங்களைக் கலந்து கலந்து தீட்டுவதில் கிடைக்கின்ற உயிரோட்டமும் பனுவலாக்கமும் கணினியில் நாம் எதிர்பார்க்க முடிதாது. ஒரு குழந்தையைத் தொடுவதற்கும் ஒரு தாளைத் தொடுவதற்கும் எத்தகைய வேறுபாடு உண்டோ அத்தகையதுதான் இந்த ஊடகங்களுக் கிடையேயான வேறுபாடும் என்கிறார். இவரது ஓவியங்களில் பாத்திரங்களின் முகத்திலுள்ள உறுப்புகளுக்கோ ஆடை ஆபரணங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஏனெனில் பார்வையாளர்களின் கவனம் ஓவியப் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் அடவுகளிலிருந்து சிதறிவிடும் என்பதால். ஓவியராக மட்டுமில்லாமல் பார்வையாளர் கோணத்திலிருந்தும் ஓவியத்தைப் படைப்பது இவரது ஓவியத்தின் வெற்றியாக உணர முடிகிறது. நுட்பமான பண்பாட்டு அசைவுகளை வண்ணமயமான ஓவியங்களால் வெளிப்படுத்தும் தண்சணாமூர்த்தியின் படைப்புகள் கலை உலகின் பேழைகளாக நிலைத்து நிற்கும் வல்லமை உடையன.