இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 நவம்பர், 2010

திருநெல்வேலி

சிற்பச்சிறப்பு

இசைத்தூண்கள்

நூலகத்தில் நவநீத்ன், எழிலவனுடன்


திராவிடப் பல்கலைக்கழகம், தென்னிந்திய நாட்டார்வழக்காற்றியல் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட உள்ளது, அதற்கான செயலரங்கு பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி சென்றிருந்தேன். நெல்லையப்பர் கோயிலுக்கு நண்பர் எழிலவனோடு சென்றேன். அங்குள்ள இசைத்தூண்கள் பற்றி எழிலவன் குறிப்பிட்டார். நாங்கள் காதுகளைத் தூண்களில் வைத்து விரல் நகத்தால் ஒலி எழுப்பி கேட்டோம் கணீரென இசைக்கருவிகளிலிருந்து தோன்றுவது போல இனிய இசை கேட்டது . மிக நுட்பமாக அந்தத் தூண்களை அக்கால சிற்பிகள் செய்திருப்பதை உணர்ந்தோம் அது பற்றிய நுட்பங்கள்குறித்து கோயில் தலவரலாற்று நூலில் குறிப்பிடாதது ஏமாற்றமாக இருந்தது. அங்குள்ள வழிகாட்டிக்கும் அது பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. ஏழு சுரங்களுக்கும் ஏழு தூண்கள் அவ்வளவுதான் இந்த மண்டபத்திற்குப் பெயர் நாத மணி மண்டபம். ராசா இங்குதான் அமர்ந்திருப்பார் அவர் காலத்திற்குப் பிறகு இந்த மணியை யாரும் அடிப்பதில்லை என்ற தகவலைக்கூறினார். அந்த மணியின் நாக்கு இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. அங்குள்ள சிற்பங்கள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தன. அணிகலன்களைக் கல்லில் வடித்திருந்த விதம் காண்போரை வியக்கச் செய்த்து. இருட்டுக்கடையில் அல்வா வாங்க நணபர் நவநீதகிருட்டிணன் அழைத்துச்சென்றார். மாலை 5.30 க்குக் கடையைத் திறக்கின்றனர் 7 மணிக்கெல்லாம் வியாபாரம் முடிந்து விடுகிறது. கூட்டம் களைகட்டுகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ அல்வா விற்பனை ஆவதாக பக்கத்துக் கடையில் வேலை செய்பவர் கூறினார்.தொடர்வண்டியில் பயணச்சீட்டு கிடைக்காமல் அரசு போக்குவரத்துக்கழகத்தில் முன்பதிவு செய்ய நண்பர் செல்வின் அழைத்துச் சென்றார் நல்லவேளை சீட்டு கிடைத்தது. பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்திலும் தொடர்வண்டி நிலையத்திலும் அலை மோதியது. விருத்தாசலத்திலிருந்து புறப்படும் போது மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் தொடர்வண்டியில் காத்திருப்போர் பட்டியலில் 27 ஆம் இடத்திலிருந்தேன் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நண்பர் சதீசு கூறியதை நம்பி நிலையத்திற்கு வந்தபோது 26 ஆம் இடத்திலிருந்தேன் அங்கு வந்திருந்த கண்மணிகுணசேகரன் அவரது நண்பரான பயணச்சீட்டு பரிசோதகருக்கு தொலைபேசியில் கூறி எனக்கு இடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். தொடர்வண்டியில் அவர் குறிப்பிட்டிருந்த 3 பெட்டிகளிலும் மூன்று முறைக்கு மேல் சுற்றி அவர் சமையல் கூடத்திலிருக்கிறார் என்ற தகவலைத் தெரிந்துகொண்ட பிறகு அங்கு சென்றால் வேறு ஒருவர் தான்தான் புகழேந்தி என்று கூறி இடம் பெற்றுக்கொள்ள என்னைப் பார்த்ததும் ஏமாற்றியவருக்கு இடம் கொடுக்கவேண்டாம் உண்மையான புகழேந்தி இப்போதுதான் வருகிறார் எனக்கூறி ஒரு வழியாக இடம் கிடைத்தது. ஏ.சி.யில்தான் இடம் இருக்கிறது கூடுதல் கட்டணம் 350 கொடுக்கவேண்டும் எனக்கூறி திருச்சி சென்றதும் படுப்பதுபோல் இடம் ஒதுக்கிக் கொடுத்தார் சில்லரை இன்மையால் அவருக்கு தரவேண்டிய 10 ருபாயைத் தராமலே நெல்லையில் இறங்கியது உறுத்தலாகவே இருக்கிறது. மாலை நண்பர் செல்வின் பேருந்து நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.நாட்டார் வழக்காற்றியல் மைய நூலகம் பற்றி கூற மறந்துவிட்டேன் அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை கணினியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர் நூலின் பெயரையோ ஆசிரியர் பெயரையோ கூரினால் ஒரு நொடியில் அந்த நூல் இருக்கும் அலமாரி தெரிந்துவிட உடனே எடுத்துக்கொடுக்கின்றனர் 15 ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்திருந்த மண்கவுச்சியும் களம்புதிது இதழ்களும் இருக்கின்றனவா என பார்த்தேன் அடுத்தவினாடியில் அப்பெயர்கள் திரையில் ஒளிர்ந்தது கண்டு மகிழ்ந்தேன் நமது அரசு நூலகங்கள் எப்போது இப்படி செயல்படப்போகின்றனவோ ?

13 நவம்பர், 2010

நாட்டுப்புற கதைகள்











நாட்டுப்புற கதைகள்




கார்குடலில் தொண்ணூறு வயது லட்சுமி பாட்டி கூறிய ராமன் கதை வீமன் கதை ஆங்கிலத்தில் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது

17 அக்டோபர், 2010

களம்புதிது கவிதை விருது




களம்புதிது கவிதை விருது


களம் புதிது கவிதை விருது கவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.


விழா விருத்தசலம் மக்கள் மன்றத்தில் 24.10.2010 நடைபெற உள்ளது


பங்கேற்பு


கரிகாலன்


இரத்தின புகழேந்தி


தேவேந்திரபூபதி


சுப வீரபாண்டியன்


தமிழவன்


பர்வின்சுல்தானா


இமையம்


சுதிர் செந்தில்


ரவிசுப்ரமினியன்


இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்


அசதா


செல்மாபிரியதர்சன்


இளந்திரையன்

18 செப்டம்பர், 2010

அவர்களுஇவர்களும் இசைத்தட்டு அறிமுக விழா







கேப்டன் சி. காமராஜ் தயாரிப்பில் நண்பர் வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் இசைத்தட்டு அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

இராம நாராயணன் தலைமையில் நடைபெறும் விழாவில் தங்கர்பச்சான், தேவயானி, வி.சி.குகநாதன், கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

சிவசக்தி பாண்டியன் இசைத்தட்டை வெளியிட அகத்தியன் பெற்றுக்கொள்கிறார்.
விழாவைப் போலவே திரைப்படமும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

இடம் : ஆந்திர மகிழ சபை, விசயராகவா சாலை,
தி.நகர், சென்னை - 17.

நாள் : 18.09.2010 - மாலை 5 மணி.

14 ஏப்ரல், 2010

சரணா


சரணா சரணா, சரணாத்தி, கிளித்தட்டு என வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் ஆட்டம். செவ்வக வடிவில் நிலத்தில் கோடு கிழித்து அதனை நீள வாக்கில் இரண்டாகப் பிரித்து ஒரு அணியிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப குறுக்குக் கோடுகளை அமைத்துக்கொள்வர். உத்தி பிரிந்து ஒரு அணியினர் கோடுகளில் நின்று கொள்ள எதிரணியினர் நிற்பவர்களிடம் அடி படாமல் குறுக்குக் கோடுகளைக் கடந்து சென்று உப்பெடுத்து வரவேண்டும். அணித் தலைவனுக்குக் கிளி என்று பெயர் அவன் முதல் கோட்டில் நிற்க பிற உறுப்பினர்கள் மற்ற கோடுகளில் நிற்பர். இலங்கையிலும் தமிழர்களிடையே கிளித்தட்டு ஆடும் பழக்கம் உள்ளது. கிளி சரணா, உப்பு சரணா என இரு வகை உண்டு. முல்லை நிலத்தில் தோன்றியது கிளி சரணா, நெய்தல் நிலத்தில் தோன்றியது உப்பு சரணா எனக் கருதப்படுகிறது.பயன்: தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னால் இழுக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்னும் பண்பாட்டினை சிறுவர்களுக்குக் கற்றுத் தருகிறது.

17 மார்ச், 2010

கோட்டிப்புள்


மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் விளையாடுவது. கில்லித்தண்டு, கிட்டிப்புள் என்றும் வழங்கப்படுகிறது. இரண்டு முதல் பத்து பேர் வரை விளையாடுவர். சிறு குழியில் புள் எனப்படும் சிறு மரத்துண்டினை வைத்து கோட்டியால் கெந்திவிட்டு புள் விழுந்த இடத்திற்குச் சென்று அப்புள்ளை கோட்டியால் தட்டி எழுப்பி அடித்து விட எங்கு போய் வாழுகிறதோ அங்கிருந்து மீண்டும் மீண்டும் அது போல் செய்து இறுதியில் எதிரணியினர் புள் கிடந்த இடத்திலிருந்து கேலியான குறிப்பொலி எழுப்பியபடி ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு வந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். முதலில் புள்ளைக் கெந்தும் போது எதிரணியினர் புள்ளைப் பிடித்துவிட்டால் கெந்தியவர் ஆட்டமிழப்பார்.
பயன்கள்: ஊருடன் ஒத்துவாழக் கற்றல், திறமைக்கேற்ற வாய்புபு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல்.

11 பிப்ரவரி, 2010

பம்பரம்




சிறு கயிற்றைக்கொண்டு பம்பரத்தைச் சுழற்றி ஆடுவது பம்பரவிளையாட்டு. இதில் இரண்டுவகை ஆட்டங்கள் உண்டு. வல்லா,காட்டுக்குத்து எனக்குறிப்பிடுவர். வட்டத்துக்குள் பமபரத்தை வைத்து ஆடுவது வல்லா. இரு எல்லைக் கோடுகள் வரைந்து அதற்குள் பம்பரத்தை விட்டு கைகளில் ஏந்தி ஆடுவது காட்டுக் குத்து எனப்படும். பமபரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம், கந்தபுரிணம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களில் காணக்கிடைக்கின்றன.பயன்கள்: தனித்திறன், தன்னம்பிக்கை வளர்கிறது.

18 ஜனவரி, 2010

அம்பால் விளையாட்டு



7 ஆம் எண் வடிவக் குச்சியைக்கொண்டு ஆடும் ஆட்டம். ஒருவன் இரு கைகளாலும் குச்சியை உயர்த்திப் பிடித்துக்கொள்ள மற்றொரு சிறுவன் அதனைத் தள்ளிவிட கீழே விழுந்து கிடக்கும் அம்பால் குச்சியை மற்ற சிறுவர்கள் முடிந்தவரைத் தள்ளிச்செல்வதே இவ்வாட்டத்தின் முக்கி அம்சம். தன் குச்சியைத் தள்ளிச் செல்பவர்களைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்யவேண்டும். ஆட்டமிழப்பவர் தன் குச்சியை உயர்த்திப் பிடித்து நிற்க மீண்டும் மீண்டும் தொடரும். அதற்கு முன்பு கீழே கிடக்கும் குச்சியை அதற்குரியவன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு ஓடி வரவேண்டும். அப்போது அவனுக்குப் பின்னால் வரும் சிறுவர்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடுவர்.
எங்க வீட்டு நாய் தெரு பொறுக்கப் போச்சுகல்லால அடிச்சேன்காலொடிஞ்சி போச்சு
ஆட்டத்தின் பயன்:
சிறுவர்களிடம் மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.