இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

27 ஆகஸ்ட், 2009

சாமியான சாமியார்



சாமியார்கள் என்றாலே ஒரு மாதிரி காமடியாகப் பார்க்கும் இன்றைய சூழலில் ஒரு சாமியாருக்கு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் கோட்டைக்காடு கிராமத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. கோட்டைக்காட்டு முனியப்ப சாமி என்றால் சுற்று வட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் பழமையான கோயில் அது. சுற்றிலும் முட்புதர்கள் சூழ அடர்ந்த காட்டுக்குள் அமைந்திருந்த அந்தக்கோயிலை சீர்திருத்தி கோயில் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கும்பகோணம் மாணிக்க சாது சாமி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் எப்படி சாமியாரானார் என்பது தெரியவில்லை.1965 இல் கோட்டைக்காடு வந்து தங்கிய இவர் மூலிகை வைத்தியம் பார்ப்பது ஜாதகம் பார்ப்பது என மக்களோடு நெருங்கிப் பழகி பின்னர் அந்த வருமானத்தைக் கொண்டு கோயிலை விரிவாக்கம் செய்து மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். எப்போதும் அவரைச் சுற்றி பத்து பேர் இருந்துகொண்டிருப்பார்களாம். அவர்களுக்கு மூன்று வேளையும் அவர்தான் உணவு அளிப்பாராம். சுற்று வட்டாரங்களில் கோயில் கும்பாபிசேகம் என்றால் கோட்டைக்காட்டு சாமியார் இல்லாமல் நடக்காது அவ்வளவு பிரபலமானவர் இந்த சாமி. அவருடன் நெருங்கிப் பழகிய அவ்வூர் வேலாயுதம் (80) சாமியாரின் நற்பண்புகளைப் புகழ்ந்து தள்ளினார். "யாராவது எதாவது குடுத்தாங்கன்னா பக்கத்துல இருக்குற எல்லாருக்கும் குடுத்துட்டுதான் சாப்புடுவாரு அது கொஞ்சமா இருந்தாலும்.அவரு மாதிரி ஒரு மனுசன பாக்க முடியாதுங்க என்று சாமியாரின் மரணத்தை எண்ணி கண் கலங்கினார். முனியப்பர் கோயிலுல மூணு கெணறு அந்த காலத்துல இருந்துருக்குணும்னு சொல்லிகிட்டிருந்தவரு திடீர்னு ஒரு நாளு ஆளுங்கள கூப்பிட்டு இந்த எடத்துல தோண்டுங்கன்னு சொன்னாரு பத்தடி தோண்டுனா அதுல பழய கெணறு இருக்கு அந்த கேணியிலதான் இப்ப மோட்ரு போட்டு தண்ணி எரைச்சிகிட்டிருக்கு. அவ்வளவு சக்தியானவரு" என்று கூறினார். 1996 ஆம் ஆண்டு சாமியார் திடீரென மரணமடைய அவரது சொந்த ஊர்க்காரர்கள் அவரது சடலத்திற்கு உரிமை கோர ஊரே சேர்ந்து மறுத்துவிட்டது. அவர் வாழ்ந்த முனியப்பர் கோயில் வளாகத்திலேயே அவருக்கு சமாதி அமைத்து சமாதியின் மேல் சாமியாருக்கு சிலையும் அமைத்து வழிபட்டு வருகின்றனர். சாமியாரைப்பற்றி ஊரில் விசாராத்தபோது," சாமிதாங்க எங்களுக்கு தெய்வம்". என்றார் பரமசிவம், மேலும் அவர் கூறிம்போது," இப்ப இருக்குற டுபாக்கூர் சாமியாரு மாதிரியில்ல இவரு. நான் அப்ப துபாயிக்கு வேலைக்கு போயிருந்தன் சாமியாரு செத்துட்டாருன்னு சேதி கெடைச்சுது உடனே நானும் எங்கூட இருந்த எங்கூருக்காரங்க மூணு பேரும் மொட்ட போட்டுகிட்டோம். அந்த அளவுக்கு சாமியாரு மேல எங்களுக்கு மரியாதை". என்று அவர் கூறியதும் பக்கத்தில் அமர்ந்திருந்த கொளஞ்சி என்பவர்," சுருக்கமா சாமியார பத்தி சொல்லணும்னா அவரு எம்.ஜி.ஆர். மாதிரி" என்றார். மற்ற சாமியார்களைப் போல் பித்தலாட்டம் எதுவும் செய்யாமல் மக்களுக்காக வாழ்ந்த மாணிக்கசாது சாமி மாறுபட்ட சாமியார்தான்.

12 ஆகஸ்ட், 2009

மண் கவுச்சியடிக்கும் கோவிந்தன் ஓவியங்கள்








குறிப்பிடத் தகுந்த சமகால ஓவியர்களில் கோவிந்தன் ஒருவர்.பண்ணுருட்டி வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் பிறந்த இவர் சிறு வயதில் கையில் கிடைத்த மண்கட்டிகளைக் கொண்டு சுவரில் கிறுக்கி பெற்றோரிடம் உதை வாங்கியபோது எதிர் காலத்தில் ஓர் ஓவியராய் வருரார் எனபது அவரின் பெற்றோருக்கே தெரிந்திருக்காது. பள்ளிப் பருவத்தில் ஓவிய ஆர்வம் வளர வளர ஓவியத்தை ஒரு பாடமாக படிக்கலாம் என்பது இந்த கிராமத்து மாணவருக்கு தெரிந்திருக்கவில்லை எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை ஓவியக் கலைக் கல்லூரியில் நுண்கலைப் பட்டையப் படிப்பில் சேர்ந்த பிறகுதான் ஓவியம், சிற்பம் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்டதாகக் கூறும் ஓவியர், ஓவியம் தீட்டுவதோடு சுடுமண் சிற்பம்,சிமெண்ட் சிற்பம், மரச்சிற்பம், செப்புத் தகடுகளில் செய்யும் புடைப்புச் சிற்பம் எனப் பல வகைச் சிற்பங்கள் செய்வதில் நுட்பமான பயிற்சியைக் கல்லூரி நாட்களில் பெற்றவர். கோட்டோவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், தைல வண்ண ஓவியங்கள், கணினி ஓவியங்கள் என அத்தனை வகை ஓவியங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். கோவிந்தன் பாணி ஓவியங்களில் கோடுகளும் வண்ணங்களும் தனித்த அடையாளமுடையவை. குறைந்த கோடுகளைக் கொண்டே ஆற்றல் மிக்க ஓவியங்களை வரைவது இவருக்குக் கை வந்த கலை. சிற்றூர் கடவுள்களின் முகங்கள் மனித முகங்களோடு ஒத்திருப்பதையும் இவரின் கோட்டோவியங்களில் காணலாம். கோடுகளற்ற வண்ணங்களின் அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் இவரின் தைல வண்ண ஓவியங்களில் நம் நாட்டுப்புற கோயில் வடிவங்கள் புலப்படுகின்றன. நீர் வண்ணமாக இருப்பினும் அதில் இவரது முழுத்திறமையை வெளிப்படுத்துவார். சூரிய ஒளியை வண்ணத்தில் கொண்டுவரும் திறமையை இவரின் நீர் வண்ண ஓவியங்கள் பலவற்றில் காணலாம். இவரது கணினி ஓவியங்களிலும் மரபின் தொடர்ச்சி விடுபடாமல் உள்ளது சிறப்புக்குறியது. இவர் உருவாக்கிய சிறபங்கள் பேராசிரியர்களால் பாராட்டப்பெற்றவை. சிவலிங்கத்தை மலர் மொட்டு போன்ற வடிவத்தில் செம்பால் சிற்பமாக இவர் செய்துள்ளார் அச்சிற்பம் இன்றும் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஓவியராகப் பணியாற்றி வரும் கோவிந்தன் ஓவிய, சிற்பக் கலைகளைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது கவிதை எழுதுவது ஆலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என கலை இலக்கிய ஈடுபாட்டு உணர்வோடு இயங்கி வருகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளிலும் ஓவியக் கண்காட்சிகள் நிகழ்த்தியுள்ளார்.சண்டிகரில் நடைபெற்ற உலகாளாவிய வரை கலைக்கான காட்சியில் முதன் புதலாகப் பங்கேற்ற தென்னிந்திய ஓவியர் கோவிந்தன் என்பது குறிப்பிடத் தகுந்தது. விடுமுறை நாட்களில் தான் பிறந்த நடுக்குப்பத்திற்கு இன்றும் செல்வது வழக்கம் அதனால்தான் கோவிந்தன் ஓவியங்களில் இன்னமும் மண்கவுச்சி வீசிக் கொண்டிருக்கிறது.