இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

2 மார்ச், 2024

நடுநாட்டுச் சிறுகதைகளின் முன்னோடி

 அஞ்சலி

***



தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கவிதை, கதைகள் வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டபோது வழக்கமாக இளைஞர்கள் வாசிக்கும் வெகுமக்கள் இதழ்களில் வரும் கதை கவிதைகளையே வாசிக்க நேர்ந்தது. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் என்னுடன் பயிற்சி பெற்ற நண்பன் அருள், நிரந்தர மனிதர்கள் என்னும் அறிவுமதியின் கவிதைத்தொகுப்பை எனக்கு பரிசளிக்க அந்த கவிதைகளில் வீராணம் ஏரி, சாலைப் புளியமரம் போன்ற கவிதைகளில் முதன்முதலாக எம் வட்டார மனிதர்களையும் மண்ணையும் வாசிக்க வாசிக்க என்னுள் இனம்புரியாத மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. பிறகு பயிற்சி முடித்து சு.கீணனூர் தொடக்கப்பள்ளியில் விடுப்பு பதிலி ஆசிரியராக பணியேற்ற போது உடன் பணியாற்றிய முதனை செயராமன் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி இந்த ஊர்க் காரர்தான் என்று கூறியபோது என்னால் நம்ப இயலவில்லை. கீணனூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கவிஞர் அறிவுமதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இலக்கியம் குறித்து நிறைய உரையாடினோம். கடிதத்தின் வாயிலாகவும் உரையாடல் தொடர்ந்தது. இப்படியாக அவர் நட்பு பல நூல்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அறிமுகப்படுத்தியது. அவர்தான் பழமலயின் சனங்களின் கதை கவிதை நூலையும், ராசேந்திரசோழனின் எட்டு கதைகள் நூலையும் கொடுத்து இவைகளைப் படி. நீயும் கவிதைகள் எழுதுவதோடு கதைகளையும் நிறைய எழுது என்று ஊக்கப்படுத்தினார். அவ்வப்போது கடிதத்தின் மூலமும் ஊக்கப்படுத்துவார்.

 எட்டு கதைகள் ஒருமுறை படித்துமுடித்த உடன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மீண்டும் மீண்டும் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கிட முடியாத அளவுக்கு பல முறை படித்தேன். ஒவ்வொரு கதையும் எங்கள் ஊரில் நடந்தவை போலவே இருந்தது. கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் எங்கள் ஊர் மனிதர்களாக இருந்தனர். நம்ம வாழ்க்கையும் சிறுகதையாகியுள்ளதே என்னும் மகிழ்ச்சி ஒருபுறம். கதையிலுள்ள நுட்பங்களை விளங்கிக்கொள்ளும் பக்குவம் அப்போது இல்லை. ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மக்களின் வாழ்க்கை அழகுகளும் அவலங்களும் அவரது கதைகளில் கொட்டிக்கிடந்தன.

நடுநாட்டு மக்களின் வாழ்க்கை இலக்கியமாகியுள்ளதே என்பதே முதல் மகிழ்ச்சி. அதுவரை சிறுகதையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் எல்லாருமே மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையே பதிவு செய்து வந்த சூழலில் முதன் முதலாக  விவசாயக் கூலிகளையும், வண்டிமாட்டுத் தொழிலாளிகளையும், அடித்தட்டு மக்களையும் சிறுகதையில் கொண்டுவந்தவர் நம் ராசேந்திரசோழன் என்பதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். விந்தன் கதைகளில் இப்படிப்பட்ட கதாப் பாத்திரங்கள் அமைந்திருந்தாலும் அதில் ஒரு பொதுத்தன்மை காணப்படும். ஆனால் இவர் கதைகளில் நம் நடுநாட்டுத் தனித்தன்மை மேலோங்கியிருக்கும்.

ஏன் நாமும் இதுபோல் எழுதக்கூடாது என்று முயற்சி செய்து பார்த்தேன், எங்கள் ஊரில் அப்போது கரும்பு தீவிரமாக பயிரிட்ட காலம் அது. எனவே கரும்பு வெட்டும் தொழிலாளிகளைப் பற்றி கரும்பு என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன். அப்போது விருத்தாசலத்தில் நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டது. இளைஞர்கள் தங்கள் படைப்புகளை வாசிக்க அனுமதித்து விமர்சனம் செய்து ஊக்கப்படுத்தினார்கள். கரும்பு கதையை வாசித்து பாராட்டு பெற்றதும், இதனை இதழில் வெளியிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தினப்புரட்சி நாளிதழில் மக்கள் இலக்கியம் என்னும் ஒரு பக்கம் வெளியானது. அதன் பொறுப்பாசிரியர் நண்பர் ப.தி.அரசு இந்த கதையை வெளியிட்டார். அதனைப் படித்த நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் என்னைப் பாராட்டியதாக அண்ணன் அறிவுமதி அவர்களின் மூலம் கேள்விப்பட்டேன். இதற்கெல்லாம் மூலகாரணம் அஸ்வகோஷ் என்னும் ராசேந்திரசோழன் அவர்களே. இந்த உற்சாகத்தோடு சில கதைகளை எழுதினேன்.

 அப்போது விருத்தாசலத்தில் சதாசிவம் அவர்களின் அருணா டெக்ஸ்டைல்ஸ்தான்  இலக்கியவாதிகள் சங்கமிக்கும் இடம். அடிக்கடி அங்கு சென்று புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை அஸ்வகோஷ் அவர்கள் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது அவர்களை அருணாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதிய ஒரு கதையின் கையெழுத்துப் படியை அவர்களிடம் கொடுத்து இந்த கதை குறித்து நீங்கள் கருத்து கூறவேண்டும் எனக்கேட்டபோது சற்றும் தயங்காமல் வாங்கி படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து அழகாக உள்ளது. கதை எழுதுவதற்கான நடை உங்களுக்கு வசப்பட்டுள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அவரின் அந்த பண்பாடு இன்றும் வியப்பளிக்கிறது. அவரோ பெரிய எழுத்தாளர் நானோ ஒரு கத்துக்குட்டி ஆனாலும் அவர் அதுபோல் நினைக்காமல் நேரம் ஒதுக்கி உடனே படித்து கறுத்து கூறிய விதம் என் மனத்தில் அவருக்கு மாபெரும் சிம்மாசனத்தை இட்டுவைத்தது. இன்று வரை அவர் படைப்பு எங்களுக்கு பிரமிப்பாகத்தான் உள்ளது. 

 ஒரு சிறந்த எழுத்தாளரே நம்மைப் பாரட்டிவிட்டாரே என்று நினைக்கும்போது இன்றும் அந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கிறது.

அதன் பிறகு அவர்களின் மற்ற படைப்புகளைத் தேடினேன். 21 ஆவது அம்சம் பற்றி சதாசிவம் அவர்கள் கூற அந்த நூலையும் வாங்கினேன். ஆனால் இன்று வரை அதனைப் படித்து முடிக்கவில்லை. அவரது எட்டு கதைகள் ஒன்றே போதும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்று ஒரு நூலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். எனக்கு ரசேந்திரசோழனின் எட்டு கதைகள்தான் வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்.

 இந்த மண்ணின் மாபெரும் படைப்பாளியை இலக்கிய உலகம் கொண்டாடியிருக்கவேண்டாமா? அதற்கெல்லாம் தென்மாவட்டத்தில் பிறந்திருக்கவேண்டுமோ? காலம் உள்ளவரை ராசேந்திர சோழனின் படைப்புகள் நிலைத்து நிற்கும். 

இணையத்தில் அவரது வலைப்பூ பார்த்தேன். 2014 க்குப் பிறகு படைப்புகள் பதிவேற்றப்படவில்லை. அவரது அத்தனை படைப்புகளும் இணையத்தில் வாசிக்க வழியேற்படுத்தி இளைஞர்களிடம் அவரது படைப்புகளை கொண்டுசேர்க்கவேண்டும்.

ஐயா அவர்களின் படைப்புகளை காலம் கொண்டாடும்.

நாட்டுப்புறவியல் துறைக்கும் சிறுவர் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் நூல்





நண்பர் பல்லவிக்குமார் அவர்களின் புதிய நூலை இன்று வழங்கினார். எனது அணிந்துரையிலிருந்து.....

நாட்டுப்புறவியல் துறையில் தமிழ் படித்தவர்கள் மட்டுமே ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ய வந்திருப்பது அந்த துறையை மேலும் வளப்படுத்தும். நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது பல்துறை களப்பாய்வாக இருக்க வேண்டும் என்பதை எங்கள் பேராசிரியர் முனைவர் ஆறு. இராமநாதன் அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவார்கள்.

பல்வேறு நாட்டுப்புறவியல் அறிஞர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர். அவர்கள் விரும்பியபடி இப்போது நாட்டுப்புறவியல் துறையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளை தங்கள் துறை சார்ந்தும் நாட்டுப்புறவியல் சார்ந்தும் நிகழ்த்தி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நண்பர் முனைவர் பல்லவிக்குமார் அவர்கள். அவர் பல துறைகளில் அழங்கால் பட்டவர் உடற்கல்வித்துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியவர் முறையாக உடற்கல்வி பயின்றவர் வணிகவியல் துறையிலும் முதுகலை ஆசிரியராக திறம்பட பணியாற்றியவர் தற்போது நாட்டுப்புறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று அத்துறைக்கு தன்னால் என்ற வகையில் வளம் சேர்த்து வருகிறார். நண்பர் இதழாளராகவும் படைப்பாளராகவும் பதிப்பாளராகவும் தீவிரமாக இயங்கி வருபவர். பல்வேறு படைப்பாளர்களின் நூல்களை தமிழ் பல்லவி வெளியீடாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார் இப்படி இலக்கியம் சார்ந்தும் நாட்டுப்புறவியல் சார்ந்தும் மொழிபெயர்ப்பு சார்ந்தும் பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்தந்த துறைகளுக்கும் தன்னால் என்ற பங்களிப்பை முழுமையாகவும் ஈடுபாட்டோடும் செய்து வருபவர். தன்னை ஒரு தனி நபராக இல்லாமல் ஒரு இயக்கமாக மாற்றிக் கொண்டு இயங்கி வருபவர். என்னுடைய கிராமத்து விளையாட்டுகள் நூலை வெளியிடும்போது முனைவர் பல்லவிக்குமார் அவர்களின் கையெழுத்து படிகளாக வைத்திருந்த அவருடைய குறிப்பேடுகள் குறிப்பாக விளையாட்டு கொள்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவிகரமாக அமைந்தன. நியாயமாக எனக்கு முன்பே இந்த நூலை அவர் கொண்டு வந்திருக்க வேண்டும். இப்போது நாட்டுப்புற சிறுவர் விளையாட்டுகள் என்ற தலைப்பில் தனது ஆய்வேட்டின் ஒரு பகுதியை மேலும் செழுமைப்படுத்தி இங்கே வாசகர்களுக்கு நூலாக வழங்கி உள்ளார்.

விளையாட்டு அவர் பணியாற்றிய துறை மட்டுமல்ல சிறு வயது முதலே சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தவர் எனவே விளையாட்டு குறித்து ஆய்வு செய்வதற்கும் நூல் வெளியிடுவதற்கும் முழுமையான தகுதி உடையவர். விளையாட்டுகளை அறிவியல் முறைப்படி இந்த நூலில் ஆய்வு செய்துள்ளார். விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது எதிர்கால மனித வளத்துக்கான ஒரு முதலீடு. பெருநகர குழந்தைகள் கணினியில் விளையாண்டு கொண்டிருக்கும் சூழலில் நாட்டுப்புற சிறுவர்கள் தான் நம் மரபு வழி விளையாட்டுகளை இன்னும் காப்பாற்றி வருகின்றனர். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது விளையாடிய விளையாட்டுகள் இப்போது வடிவங்களிலும் உள்ளடக்கங்களிலும் வெவ்வேறு சிறு சிறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. நாட்டுப்புற கதைகளை போல பாடல்களைப் போல நாட்டுப்புற விளையாட்டும் ஒரு கூட்டுப் படைப்பாகவே திகழ்கிறது கால சூழலுக்கு ஏற்பவன் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்படும் அவர்களின் படைப்பாற்றலுக்கு ஏற்படவும் விளையாட்டுகள் புதுப்புது மாற்றங்களோடு தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன.

இந்த நூலில் முனைவர் பல்லவி குமார் அவர்கள் விளையாட்டுகளை சிறுவர் விளையாட்டு சிறுமியர் விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டுகள் என்று நுட்பமாக ஆய்வு செய்ததோடு விளையாட்டு எப்படி நல்வாழ்வுக்கான ஒரு மிகச் சிறந்த கருவியாக திகழ்கிறது என்பதை நூலின் இறுதியில் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகிறார்.

அனைத்து துறைகளிலும் நமது மரபு வழி அறிவு எப்படி தேவைப்படுகிறது அதுபோலவே விளையாட்டிலும் நமது மறு வழி விளையாட்டுகள் சிறுவர்களை சமூகவயமாக்குவதிலும் உடல் ரீதியாக பலமானவர்களாக மாற்றுவதோடு மட்டுமின்றி நம் பண்பாட்டுக் கூறுகளை விளையாட்டு சிறுவர்களிடம் கடத்துகிறது. பல்வேறு நற்பண்புகளை விளையாட்டுகள் வாயிலாக சிறுவர்கள் தம்மை அறியாமலே கற்றுக் கொள்கின்றனர் என்பது நம் நாட்டுப்புற விளையாட்டுகளுக்கான தனித்தன்மையாக விளங்குகிறது. தமிழர் விளையாட்டுகள் குறித்து பல்வேறு தமிழ் அறிஞர்களும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் துறை சார்ந்த ஆய்வுக்கு தமிழறிஞர்களின் ஆய்வுக்கு ஏராளமான வேறுபாடுகளை காண முடிகிறது. நண்பர் பல்லவிகுமார் அவர்களின் இந்த நூல் விளையாட்டு துறைக்கு மட்டுமின்றி நாட்டுப்புறவியல் துறைக்கும் தமிழ் இலக்கியத் துறைக்கும் வளம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது இந்த நூலின் தனிச்சிறப்பாக நான் கருதுகிறேன். மேலும் ஒவ்வொரு விளையாட்டும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் எத்தகைய பயன்களை சிறுவர்களுக்கு தருகின்றன என்பதை மிகவும் நுட்பமாக ஒரு விளையாட்டு வீரராகவும் உடற்கல்வி பயிற்றுநர் ஆகவும் தேர்ந்த ஆசிரியராகவும் நல்ல ஆய்வாளராகவும் சிறுவர் இலக்கிய படைப்பாளியாகவும் இந்த நூலில் மிகச் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.நண்பர் பல்லவி குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.தமிழ் இலக்கிய உலகம் இந்நூலினைப் போற்றி வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன்.


அன்புடன்,

முனைவர் இரத்தின புகழேந்தி

6 ஜூன், 2021

தமிழ் அமிழ்து நேர்காணல்

 லைஃப் வின்னர்ஸ் புலனக்குழுவில் திரு. அக்பர் அவர்கள் முனைவர் இரத்தின புகழேந்தியுடன் நிகழ்த்திய நேர்காணல்.

https://youtu.be/9pDmwWdZk14

14 ஏப்ரல், 2021

நூறு ஆண்டுகள் கடந்த மருங்கூர் வீடு

மரபு கட்டுமானம்

மருங்கூர் வீடு குறித்த செய்தித் தொகுப்பு.


https://youtu.be/nINJic9r56s


21 அக்டோபர், 2020

நடுநாட்டு வாய்மொழி வழக்காறுகள்

 https://m.facebook.com/story.php?story_fbid=3946666538695615&id=100000569226264

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

 முகநூல் நேரலையில் காணொலி


https://m.facebook.com/story.php?story_fbid=3987429344619334&id=100000569226264

12 ஆகஸ்ட், 2020

தெருக்கூத்துக் கதைகள்

 

 



முன்னுரை

            தெருக்கூத்து பற்றி பல்வேறு கோணங்களில் தமிழில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தெருக்கூத்து நிகழ்த்துவதற்கு முதல் தேவை கதையே ஆகும். எனவே கதைகள் பற்றிய ஆய்வும் இன்றியமையாதது ஆகும். அந்த அடிப்படையில் இக்கட்டுரை தெருக்கூத்துக் கதைகள் பற்றி ஆய்வு செய்திடும் நோக்கில் அமைந்துள்ளது. இகட்டுரைக்குத்தேவையான தரவுகள் தெருக்கூத்துக் கலைஞர்களிடம் கலந்துரையாடி பெறப்பட்டன. அந்த தகவல்கள் மற்றும் தெருக்கூத்து நாடக நூல்கள் ஆகியவை முதன்மை ஆதாரமாகவும் தெருக்கூத்து பற்றிய நாட்டுப்புறவியல் நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை  துணை ஆதாரமாகவும் கொண்டு இக்கட்டுரைஅமைந்துள்ளது.

ஆய்வுப்போக்குகள்:

            தெருக்கூத்துக் கதைகளைப்பற்றி நாட்டுப்புறவியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்துள்ளனர். முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் தமிழர் கலை இலக்கிய மரபுகள் என்னும் ஆய்வு நூலில் தெருக்கூத்து பற்றிய குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். தென்னார்க்காடு மாவட்டத்தில் தெருக்கூத்து என்ற ஆய்வுக்கட்டுரையில் கூத்துக்கதைகளை ஐந்தாக வகைப்படுத்தியுள்ளார். அவை 1.மகாபாரதக் கதைகள்,  2.புராணங்களை ஒட்டிய பிற கதைகள், 3.சரித்திரம் தொடர்பான புனைகதைகள், 4.குடும்பத்தொடர்பான புனைகதைகள் என்பனவாகும்.  இவை மட்டுமின்றி  கதைகளின் பண்புகள் அடிப்படையில் சண்டை, பக்தி, காதல்  எனவும் நில அடிப்படையில்  வட்டார கதைகள், தமிழகக்கதைகள், இந்திய கதைகள் என்றும் வகைப்படுத்தியுள்ளார். கிங்ஸ்டன் செல்வராஜ் என்பவர் தெருக்கூத்துக் கதைகளை வகைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிய தனது ஆய்வுக்கட்டுரையில் நாட்டுப்புற கதைகளை வகைப்படுத்துவதுபோல் தெருக்கூத்துக் கதைகளை எளிதாக வகைப்படுத்த இயலவில்லை என்று குறிப்பிடுகிறார்.

கட்டுரை நோக்கம்:

            இத்தகைய சூழலில் இக்கட்டுரை தமிழகத்தில் நூற்றாண்டு காலமாக நிகழ்ந்து வரும் மரபுக் கலையான இந்த தெருக்கூத்தில் எத்தனைக் கதைகள் இடம்பெற்றுள்ளன? அவை எத்தகைய பண்புகளை உடையவை? கதை அமைப்பு முறை எப்படி உள்ளது? தெருக்கூத்துக் கதைகளில் இடம்பெறும் பாடல்கள் எவ்வாறு அமைந்துள்ளன? என்ற வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தெருக்கூத்து கதைகள்:

            கடலூர் மாவட்டம் குறவன்குப்பம் திரு கோவி.சடகோபன் என்ற நாடக ஆசிரியரிடமும் மன்னம்பாடி, களர்க்குப்பம் ஆகிய ஊர்களிலுள்ள தெருக்கூத்துக் கலஞர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் தெருக்கூத்தில் இரு நூறு வகையான கதைகள் உள்ளது என கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களால் நூற்று தொண்ணூறு கதைகளை மட்டுமே நினைவுகூற முடிந்தது.(காண்க: பின் இணைப்பு)

தெருக்கூத்துக்கதைகளின் பண்புகள்:

            தெருக்கூத்து கதைகளின் முதன்மையான பண்பு சண்டை எனுமளவுக்கு சண்டை குறித்த கதைகள் ஏறாளமாக உள்ளன. அதற்கடுத்து திருமணம் பற்றிய நாடகங்களைக் குறிப்பிடலாம். மன்னர்கள் முடிசூடுதல் பற்றிய கதைகள், சம்காரம் பற்றிய கதைகள், மோட்சம் குறித்த கதைகள் ,மனிதர்கள் ,புனிதர்களின் மகத்துவம் பற்றிய கதைகள் என பல்வகையான பண்புகளில் கதைகள் அமைந்துள்ளன.

 

 

 

கதைகளின் அமைப்பு முறை:

            தெருக்கூத்துக் கதைகள் பெரும்பாலும் பின் வரும் அமைப்பைக் கொண்டுள்ளன. 1.காப்பு, 2.தரு, 3.விருத்தம், 4.வசனம் என்ற நான்கடுக்கு முறையில் அமைந்துள்ளன.

            காப்பு என்பது கடவுள் வாழ்த்துப்பகுதி இவை வினாயகர்,கலைவாணி போன்ற கடவுளரைப் போற்றிப்பாடுவதாக உள்ளன.

            தரு என்பது கதாப்பாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக்கொளவதும், ஒருவரோடு ஒருவர் உரையாடுவதுமான  பாடல் வடிவில் அமைந்த பகுதியாகும்.

            விருத்தம் என்பது கதை நாயகன் நாயகி தன் செயலை / நிலையைப் பாடலாகப் பாடும் பகுதி.

வசனம் என்பது அடுத்து வரும் கதாப்பாத்திரம் யார் அவர் என்ன செய்யப்போகிறார் போன்றவற்றை வசனமாகக் கூறும் பகுதி.

இந்த அமைப்பு முறை சில கதைகளில் சற்று மாறுபடுவதும் உண்டு. இவை மட்டுமன்றி  எல்லா தெருக்கூத்து கதைகளிலும் சில ஒழுஙமைப்புகள் காணப்படுகின்றன. கதை நாயகன்/நாயகியின் பிறப்பு அவர்களின் திருமணம் , வாழ்வில் ஏற்படும் சோதனைகள் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காண்பது என சில மரபுகள் அனைத்துக் கதைகளிலும் பின்பற்றப்படுகின்றன.

பாடல் அமைப்புகள்:

            தெருக்கூத்துப் பாடல்கள் கதைப்பாடல் அமைப்புகளையே கொண்டுள்ளன. பேச்சு மொழியில்  பாடல்களின் பல சொற்கள்  அமைந்துள்ளன. வெண்பா அமைப்புகளும் சொல்லடுக்குகளும் கதைப் பாடல்களை ஒத்துள்ளன.

 

 

முடிவுரை:

தெருக்கூத்து கதைகள் பெரும்பாலும் இராமாயணம் , மகாபாரதம், புராணக் கிளைக்கதைகள் ஆகியவற்றின் அடிப்படியிலேயே அமைந்துள்ளன.

கூத்துக் கதைகளில் சண்டை, சம்காரம்,திருமணம்,முடிசூட்டுவிழா, மகத்துவம், மோட்சம் ஆகிய பண்புகள்  அதிகமாக இடம்பெற்றுள்ளன.

கதைகள் நான்கடுக்கு முறையில் அமைந்துள்ளன.

கதைப்பாடலை ஒத்த பாடல்கள் கூத்துக் கதைகளில் இடம்பெற்றுள்ளன.

தெருக்கூத்துக் கதைகள் மரபான கதை அமைப்பு முறையைக் கொண்டுள்ளன.

 

பின் இணைப்பு:

கூத்துக்கதைகள்:

பாரதக் கதைக் கூத்துகள்

பாரதக் கதைகளில் பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதி துகிலுரிதல், அர்ச்சுனன் தபசு, பாஞ்சாலி சபதம், கர்ணமோட்சம், கிருஷ்ணன் தூது, பதினெட்டாம் போர் என்னும் கதைகள் அடிக்கடி கூத்தாக நிகழ்த்தப்படுகின்றன. ஜலக்கீரிடை, யாகசாலை, திரௌபதி திருக்கல்யாணம், அல்லி திருக்கல்யாணம், பவளக்கொடி திருக்கல்யாணம், ராஜசூய யாகம், துரியோதனன் வீரயாகம், சுந்தரி மாலையீடு, விராட பருவம், அரவான் களப்பலி, அணிவகுப்பு, பீஷ்மர் சுவேதனன் சண்டை, பகதத்தன் வதை, அபிமன்யூவதை, சயந்தவன் வதை, துரோணர் சண்டை, துச்சாதனன் சண்டை, துரியோதனன் வீர சுவர்க்கம்

  இராமாயணக் கதைக் கூத்துகள்

இராமர் பட்டாபிஷேகம், மூலபல சண்டை, பக்த ஹனுமான், சீதா கல்யாணம், இந்திரஜித், இரணியன் வரலாறு, இராவண வதம், மந்தரை-கைகேயி சூழ்ச்சி, இராமன்

குகன் சந்திப்பு, பரதன் பாதுகா பட்டாபிஷேகம், சூர்ப்பணகை மானபங்கம், பொன்மான். வாலி வதை, சபரி மோட்சம், இராமர் வைகுந்தம்

  புராணக் கதைக் கூத்துகள்

புராணக் கதைகளில் சக்தி விநாயகர், வீர விநாயகர் யுத்தம், கந்தன் - கார்க்கோடகன் யுத்தம், தாரகாசுரன் சம்காரம், திரிபுர தகனம், காமதகனம், மும்மூர்த்திகள் கர்வ பங்கம், அனுசூயை, உத்தண்டாசுரன் சம்காரம் என்னும் முத்துமாரி மகத்துவம், நளாயனி சரித்திரம், ரேணுகா சம்காரம், தக்க யாகம், வல்லாள கண்டன் - வீரபத்திரன் சண்டை, கங்கா தேவி கர்வ பங்கம் என்னும் பராசக்தி - பண்டாசுரன் சண்டை, வள்ளி திருமணம்

  பிறவகைக் கதைக் கூத்துகள்

கட்டபொம்மன், தேசிங்கு ராஜன் முதலானோர் கதைகள் வரலாற்றுக் கூத்துகளாக நடிக்கப்பட்டன. அரிச்சந்திரன் கதை, வன்னியர் வீர முழக்கம், சனிவார விரத நாடகம் முதலானவை சாதி சமயம் சார்ந்து நடைபெறும் கூத்துகள். இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை, நல்லதங்காள் கதை முதலான ஓரளவு பிற்காலக் கதைகளும் கூத்தாக நடிக்கப்படுகின்றன.

பி.கு. கானல்வரி கருத்தரங்கம் 2016 இல் வாசித்த கட்டுரை