இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

26 ஜூலை, 2009

திருவதிகை மரச்சிற்பங்கள்





கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகையில் செய்யப்படும் மரச்சிற்பங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கோயில்களையும் வீடுகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன என்பது தமிழர்களுக்கு பெருமைசேர்க்கும் செய்தியாகும்.
கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச்செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள்,சூரியப்பலகைகள் என அனைத்துவகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச்சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் இரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.
1947ஆம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்ரமணிய ஆச்சாரி,பொன்னுசாமி ஆசாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதிகோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான இராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி,இராசாராம் ஆச்சாரி,இராதாகிருட்டிண ஆச்சாரி,தேவா ஆகியோர் இக்கலைப்பணியை இன்றும் தொடர்கின்றனர்.
கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு அவ்விலக்கணப்படி தேரைவடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இடத்தில் அளவைப்பொறுத்தே தேரின் அளவை அமைக்கவேண்டும் என்றவிதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.
தேரில் பத்து வகையுண்டு; ஸ்ரீகரம்,த்வஜம்காந்தம்,ரேஷிகேசம்,நிகேதுனம்,ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம்,பத்மக்கம்,பத்ரம்,சிவம் என்று குறிப்பிடப்படும் இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது.இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார்.இவர் திருவண்ணாமலை, செவ்வாய்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களின் கோயால்களுக்குத்தேர் செய்துள்ளார்.
தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும் அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும் மேல் பாகம் தேக்கு,வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு ஆவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி,ஐதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச்சென்று தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக்கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீரு மலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச்செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணரிய போது இராசாராம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
வழுவூர் ராமையா அவர்களின் ஆலோசனையோடு இராதாகிருஷ்ணன் ஆச்சாரி உருவாக்கிய நடராஜர் சிற்பம் திருவள்ளூரில் இன்றும் உள்ளது. புருஷோத்தம ஆச்சாரி கடவுளர்களின் வாகனங்கள் பற்றிக் கூறும்போது, சிங்கம், காளை, கருடன், அன்னம், பாம்பு என பல்வேறு விலங்குகளின் உருவங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார். வாகனங்கள் செய்வதற்கு விலங்குகளின் அடிப்படை வடிவத்தை அத்தி மரக்கட்டைகளில் செதுக்கி வடிவமைக்கின்றனர். அத்திமரம் எடைக்குறைவு என்பதனால் அம்மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு வஜ்ரம்,மரத்தூள், பிலாஸ்டர் ஆஃப் பாரிஸ் ஆகியவற்றைக்கலந்து கூழ் உருவாக்கி வடிவங்களை மெருகேற்றுகின்றனர். அதன் பிறகு உப்புத்தாள் கொண்டு வழுவழுப்பாக்கி வண்ணம்பூசுகின்றனர்.வண்ணம்பூசப்பட்ட வாகனங்கள் மரச்சிற்பந்தானா? எனக் காண்போரை ஐயமுறச்செய்கின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து நாள்தோறும் கடவுளர்களின் வாகனங்கள் புதுப்பிப்பதற்காக திருவதிகை நோக்கி வந்தவண்டம் உள்ளன.
தேர், வாகனங்கள் இவற்றைவிடவும் அதிக அளவு சூரியப்பலகைகள் செய்வது இவர்களின் அன்றாட பணியாகும். சூரியப்பலகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, பண்பாடு, மொழி,சமய வேறுபாடுகளுக்கேற்ப அவர்கள் விரும்பும் சிற்பங்களை உருவாக்குகின்றனர். இதற்கு பெரும்பாலும் பர்மாதேக்கு மரங்களைப் பயன்றடுத்துகின்றனர்.செதுக்கவேணடிய உருவத்தைத் தாளில் வரைந்து அதனைப் பலகையில் ஒட்டி சிறு உளிகொண்டு செதுக்குகி சிற்பத்தை உருவாக்குகின்றனர்.
இக்கலைப்பணியைத் தொன்றுதொட்டு செய்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறைக் கலைஞர்களாக தங்கள் வாரிசுகளை உருவாக்கி வருவதோடு இப்பணியில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கின்றனர்.
கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது இது வரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழர்களின் தொன்மக்கலையில் சிறந்துவிளங்கும் இவர்களைத் தமிழக அரசு பெருமைப்படுத்த வேண்டும்.