இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

12 ஆகஸ்ட், 2020

தெருக்கூத்துக் கதைகள்

 

 



முன்னுரை

            தெருக்கூத்து பற்றி பல்வேறு கோணங்களில் தமிழில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தெருக்கூத்து நிகழ்த்துவதற்கு முதல் தேவை கதையே ஆகும். எனவே கதைகள் பற்றிய ஆய்வும் இன்றியமையாதது ஆகும். அந்த அடிப்படையில் இக்கட்டுரை தெருக்கூத்துக் கதைகள் பற்றி ஆய்வு செய்திடும் நோக்கில் அமைந்துள்ளது. இகட்டுரைக்குத்தேவையான தரவுகள் தெருக்கூத்துக் கலைஞர்களிடம் கலந்துரையாடி பெறப்பட்டன. அந்த தகவல்கள் மற்றும் தெருக்கூத்து நாடக நூல்கள் ஆகியவை முதன்மை ஆதாரமாகவும் தெருக்கூத்து பற்றிய நாட்டுப்புறவியல் நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை  துணை ஆதாரமாகவும் கொண்டு இக்கட்டுரைஅமைந்துள்ளது.

ஆய்வுப்போக்குகள்:

            தெருக்கூத்துக் கதைகளைப்பற்றி நாட்டுப்புறவியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்துள்ளனர். முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் தமிழர் கலை இலக்கிய மரபுகள் என்னும் ஆய்வு நூலில் தெருக்கூத்து பற்றிய குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். தென்னார்க்காடு மாவட்டத்தில் தெருக்கூத்து என்ற ஆய்வுக்கட்டுரையில் கூத்துக்கதைகளை ஐந்தாக வகைப்படுத்தியுள்ளார். அவை 1.மகாபாரதக் கதைகள்,  2.புராணங்களை ஒட்டிய பிற கதைகள், 3.சரித்திரம் தொடர்பான புனைகதைகள், 4.குடும்பத்தொடர்பான புனைகதைகள் என்பனவாகும்.  இவை மட்டுமின்றி  கதைகளின் பண்புகள் அடிப்படையில் சண்டை, பக்தி, காதல்  எனவும் நில அடிப்படையில்  வட்டார கதைகள், தமிழகக்கதைகள், இந்திய கதைகள் என்றும் வகைப்படுத்தியுள்ளார். கிங்ஸ்டன் செல்வராஜ் என்பவர் தெருக்கூத்துக் கதைகளை வகைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிய தனது ஆய்வுக்கட்டுரையில் நாட்டுப்புற கதைகளை வகைப்படுத்துவதுபோல் தெருக்கூத்துக் கதைகளை எளிதாக வகைப்படுத்த இயலவில்லை என்று குறிப்பிடுகிறார்.

கட்டுரை நோக்கம்:

            இத்தகைய சூழலில் இக்கட்டுரை தமிழகத்தில் நூற்றாண்டு காலமாக நிகழ்ந்து வரும் மரபுக் கலையான இந்த தெருக்கூத்தில் எத்தனைக் கதைகள் இடம்பெற்றுள்ளன? அவை எத்தகைய பண்புகளை உடையவை? கதை அமைப்பு முறை எப்படி உள்ளது? தெருக்கூத்துக் கதைகளில் இடம்பெறும் பாடல்கள் எவ்வாறு அமைந்துள்ளன? என்ற வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தெருக்கூத்து கதைகள்:

            கடலூர் மாவட்டம் குறவன்குப்பம் திரு கோவி.சடகோபன் என்ற நாடக ஆசிரியரிடமும் மன்னம்பாடி, களர்க்குப்பம் ஆகிய ஊர்களிலுள்ள தெருக்கூத்துக் கலஞர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் தெருக்கூத்தில் இரு நூறு வகையான கதைகள் உள்ளது என கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களால் நூற்று தொண்ணூறு கதைகளை மட்டுமே நினைவுகூற முடிந்தது.(காண்க: பின் இணைப்பு)

தெருக்கூத்துக்கதைகளின் பண்புகள்:

            தெருக்கூத்து கதைகளின் முதன்மையான பண்பு சண்டை எனுமளவுக்கு சண்டை குறித்த கதைகள் ஏறாளமாக உள்ளன. அதற்கடுத்து திருமணம் பற்றிய நாடகங்களைக் குறிப்பிடலாம். மன்னர்கள் முடிசூடுதல் பற்றிய கதைகள், சம்காரம் பற்றிய கதைகள், மோட்சம் குறித்த கதைகள் ,மனிதர்கள் ,புனிதர்களின் மகத்துவம் பற்றிய கதைகள் என பல்வகையான பண்புகளில் கதைகள் அமைந்துள்ளன.

 

 

 

கதைகளின் அமைப்பு முறை:

            தெருக்கூத்துக் கதைகள் பெரும்பாலும் பின் வரும் அமைப்பைக் கொண்டுள்ளன. 1.காப்பு, 2.தரு, 3.விருத்தம், 4.வசனம் என்ற நான்கடுக்கு முறையில் அமைந்துள்ளன.

            காப்பு என்பது கடவுள் வாழ்த்துப்பகுதி இவை வினாயகர்,கலைவாணி போன்ற கடவுளரைப் போற்றிப்பாடுவதாக உள்ளன.

            தரு என்பது கதாப்பாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக்கொளவதும், ஒருவரோடு ஒருவர் உரையாடுவதுமான  பாடல் வடிவில் அமைந்த பகுதியாகும்.

            விருத்தம் என்பது கதை நாயகன் நாயகி தன் செயலை / நிலையைப் பாடலாகப் பாடும் பகுதி.

வசனம் என்பது அடுத்து வரும் கதாப்பாத்திரம் யார் அவர் என்ன செய்யப்போகிறார் போன்றவற்றை வசனமாகக் கூறும் பகுதி.

இந்த அமைப்பு முறை சில கதைகளில் சற்று மாறுபடுவதும் உண்டு. இவை மட்டுமன்றி  எல்லா தெருக்கூத்து கதைகளிலும் சில ஒழுஙமைப்புகள் காணப்படுகின்றன. கதை நாயகன்/நாயகியின் பிறப்பு அவர்களின் திருமணம் , வாழ்வில் ஏற்படும் சோதனைகள் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காண்பது என சில மரபுகள் அனைத்துக் கதைகளிலும் பின்பற்றப்படுகின்றன.

பாடல் அமைப்புகள்:

            தெருக்கூத்துப் பாடல்கள் கதைப்பாடல் அமைப்புகளையே கொண்டுள்ளன. பேச்சு மொழியில்  பாடல்களின் பல சொற்கள்  அமைந்துள்ளன. வெண்பா அமைப்புகளும் சொல்லடுக்குகளும் கதைப் பாடல்களை ஒத்துள்ளன.

 

 

முடிவுரை:

தெருக்கூத்து கதைகள் பெரும்பாலும் இராமாயணம் , மகாபாரதம், புராணக் கிளைக்கதைகள் ஆகியவற்றின் அடிப்படியிலேயே அமைந்துள்ளன.

கூத்துக் கதைகளில் சண்டை, சம்காரம்,திருமணம்,முடிசூட்டுவிழா, மகத்துவம், மோட்சம் ஆகிய பண்புகள்  அதிகமாக இடம்பெற்றுள்ளன.

கதைகள் நான்கடுக்கு முறையில் அமைந்துள்ளன.

கதைப்பாடலை ஒத்த பாடல்கள் கூத்துக் கதைகளில் இடம்பெற்றுள்ளன.

தெருக்கூத்துக் கதைகள் மரபான கதை அமைப்பு முறையைக் கொண்டுள்ளன.

 

பின் இணைப்பு:

கூத்துக்கதைகள்:

பாரதக் கதைக் கூத்துகள்

பாரதக் கதைகளில் பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதி துகிலுரிதல், அர்ச்சுனன் தபசு, பாஞ்சாலி சபதம், கர்ணமோட்சம், கிருஷ்ணன் தூது, பதினெட்டாம் போர் என்னும் கதைகள் அடிக்கடி கூத்தாக நிகழ்த்தப்படுகின்றன. ஜலக்கீரிடை, யாகசாலை, திரௌபதி திருக்கல்யாணம், அல்லி திருக்கல்யாணம், பவளக்கொடி திருக்கல்யாணம், ராஜசூய யாகம், துரியோதனன் வீரயாகம், சுந்தரி மாலையீடு, விராட பருவம், அரவான் களப்பலி, அணிவகுப்பு, பீஷ்மர் சுவேதனன் சண்டை, பகதத்தன் வதை, அபிமன்யூவதை, சயந்தவன் வதை, துரோணர் சண்டை, துச்சாதனன் சண்டை, துரியோதனன் வீர சுவர்க்கம்

  இராமாயணக் கதைக் கூத்துகள்

இராமர் பட்டாபிஷேகம், மூலபல சண்டை, பக்த ஹனுமான், சீதா கல்யாணம், இந்திரஜித், இரணியன் வரலாறு, இராவண வதம், மந்தரை-கைகேயி சூழ்ச்சி, இராமன்

குகன் சந்திப்பு, பரதன் பாதுகா பட்டாபிஷேகம், சூர்ப்பணகை மானபங்கம், பொன்மான். வாலி வதை, சபரி மோட்சம், இராமர் வைகுந்தம்

  புராணக் கதைக் கூத்துகள்

புராணக் கதைகளில் சக்தி விநாயகர், வீர விநாயகர் யுத்தம், கந்தன் - கார்க்கோடகன் யுத்தம், தாரகாசுரன் சம்காரம், திரிபுர தகனம், காமதகனம், மும்மூர்த்திகள் கர்வ பங்கம், அனுசூயை, உத்தண்டாசுரன் சம்காரம் என்னும் முத்துமாரி மகத்துவம், நளாயனி சரித்திரம், ரேணுகா சம்காரம், தக்க யாகம், வல்லாள கண்டன் - வீரபத்திரன் சண்டை, கங்கா தேவி கர்வ பங்கம் என்னும் பராசக்தி - பண்டாசுரன் சண்டை, வள்ளி திருமணம்

  பிறவகைக் கதைக் கூத்துகள்

கட்டபொம்மன், தேசிங்கு ராஜன் முதலானோர் கதைகள் வரலாற்றுக் கூத்துகளாக நடிக்கப்பட்டன. அரிச்சந்திரன் கதை, வன்னியர் வீர முழக்கம், சனிவார விரத நாடகம் முதலானவை சாதி சமயம் சார்ந்து நடைபெறும் கூத்துகள். இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை, நல்லதங்காள் கதை முதலான ஓரளவு பிற்காலக் கதைகளும் கூத்தாக நடிக்கப்படுகின்றன.

பி.கு. கானல்வரி கருத்தரங்கம் 2016 இல் வாசித்த கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக