இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

26 பிப்ரவரி, 2009

சாதிப்பிள்ளைகளின் சமூகநிலை



சாதிப்பிள்ளைகள் எனப்படும் இனக்குழு மக்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு கலப்பினமாக இவ்வினத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தெலுங்கையும், பிறரிடம் பேசும்போது தமிழையும் பயன்படுத்துகின்றனர்.இவர்கள் ; குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இவ்வின மக்கள் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,கடலூர்,சேலம்,தருமபுரி,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் இம்மக்கள் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழிலைச் செய்து வந்தனர். மக்களிடையே பித்தளைப் பாத்திரத்தின் பயன்பாடு குறைந்து வருவதால் அத்தொழில் நலிவடைந்து தற்போது கிடைக்கின்ற கூலி வேலையைச் செய்து வருகின்றனர்.வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது. தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது. இது சேலம் மாவட்டம் மல்லிகுந்தம் இராம கவுண்டன் என்பவரிடம் உள்ளதாக தொல்லியல் அறிஞர் நடனகாசிநாதன் குறிப்பிடுகிறார்.இப்பட்டயம் 1708 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும்.உடையார்பாளையம் சமீன்தாரால் இது வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செப்பேடுகள் ஈரோடு,காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் உள்ளாதாகவும் அறியமுடிகிறது. அறுபத்துநான்கு அடிகள் கொண்ட இரண்டுபக்க செப்பேட்டில் அது வழங்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இப்பட்டயமும் விருதும் கொண்டுவரும் சாதிப் பிள்ளைக்கு தடையில்லாமல் தலைக்கட்டு ஒன்றுக்கு முக்குறுணி அரிசியும் ஊருக்கொரு ஆடும் பண்ணியும் கொடுக்க வேண்டியது. அப்படி கொடாமல் யாதாமொருவர் தடை செய்தவர்கள் கங்கைக் கறையில் காறாம் பசுவைக் கொன்ற தோசத்தில் போவார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பட்டயத்தினடிப்படையில் சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர். வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பதினெட்டு பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம். வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர். இவ்வின மக்கள் ஆண்டில் பாதி நாட்களுக்கு மேல் வரி வசூலிப்பதற்காக இடம் பெயரும் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்வதால் இவர்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க இயலாமல் போய்விடுகிறது.இது குறித்து இம்மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாதிப்பிள்ளை சங்கத்தை உருவாக்கி கொஞ்சிக்குப்பம் முருகன் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார் குறிப்பாக சாதிப்பிள்ளைகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும். 2001 ஆம் ஆண்டு இவர்களை விசாரணைக்கு அழைத்த அரசு இவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியது. சாதிப்பிள்ளை இன மக்கள் தொகை எவ்வளவு, பழக்க வழக்கங்கள், பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியோர் எண்ணிக்கை, பத்தாம் வகுப்பு தேரியோர் எண்ணிக்கை, பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை அளிக்கும் படி இவர்களிடம் அரசு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவர்களால் இவ்விவரங்களை எப்படி கொடுக்க இயலும்? அதனால் இவர்களின் கோரிக்கைக் கிடப்பில் போடப்பட்டது. தமிழக அரசு இவர்களைப் பற்றிய விவரங்களை அரசு அலுவலர்களைக் கொண்டு சேகரித்து இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அப்போதுதான் உண்மையிலேயே எட்ட முடியும்.

15 பிப்ரவரி, 2009

நடராசர் கோயில் நிர்வாகமும் மக்கள் எதிர்பார்ப்பும்





சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகப்பொருப்பு நீதிமனற தலையீட்டால் தீட்சிதர்களிடமிருந்து தமிழக அரசுக்குக் கைமாறியிருக்கிறது.கோயிலை யார் நிர்வகிப்பது என்பதில் காலகாலமாக சிக்கல் இருந்து வந்திருக்கிறது என்பதை கோயில் வரலாறு நமக்குச் சொல்கிறது. அரசர்களிடமிருந்த நிர்வாகப் பொருப்பினை கோயிலுக்கு பூசை செய்பவர்கள் சூழ்ச்சியால் கைப்பற்றிக்கொண்டனர். அரசுஅதிகாரிகள் கோயிலை நிர்வகித்ததற்கும், அதில் சிக்கல் எழும்போது அரசன் தலையிட்டு நிர்வாகத்தை ஒழுங்கு செய்தான் என்பதற்கும் ஆதாரமான கல்வெட்டு கோயில் வளாகத்தில் உள்ளது. மேலும் கல்வெட்டு ஆய்வாளர் செ.இராசு குறிப்பிடும்போது 1610ஆம் ஆண்டு கும்பகோணம் சிவப்பிரகாசரும்,1684 இல் தில்லை சிற்றம்பலத் தவமுனியும், 1702 இல் பாதபூசை அம்பலத்தாடுவாரும், 1711 இல் தில்லை காசி தம்பிரானும் கோயிலை நிர்வகித்ததாகக் குறிப்பிடுகிறார். 17 ஆம் நூற்றாணடில் பீசப்பூர் சுல்தான் படையெடுப்பினால் சிலகாலம் பூசை நின்றுபோனதோடு கோயில் நிர்வாகமும் சீர்குலைந்தது. 18 ஆம் நூற்றிணடில் நடைபெற்ற கர்நாடகப் போர்களின் போது படைப்பிரிவுகள் தங்குமிடமாகவும் இக்கோயில் பயன்பட்டிருக்கிறது. அதன் காரணமாக வெற்றி பெற்றவர்களால் கோயில் கைப்பற்றப்பட்டது. 1753 இல் மராத்தியர்களும் பிரஞ்சுக்காரர்களும் இணைந்து கோயிலை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றினர். 1760 இல் ஆங்கிலத் தளபதி மேசர் மான்சன் திரும்பக் கைப்பற்றினார். 1780 இல் ஐதரலி சிதம்பரம் கோயிலைக் கைப்பற்றி தம் படைகளை அங்கே தங்கவைத்தார். இப்போர்க் காலங்களில் கோயிலில் முறையான வழிபாடு நடைபெறாமல் போனதோடு கோயில் நிர்வாகமும் வலுவிழந்துபோனது. இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது எனவே அவர்களின் வழித்தோன்றல்களான பிச்சாவரம் என குறிப்பிடப்படும் பித்தர்புரம் பாளையக்காரர்கள் இக்கோயிலை நிர்வகித்து வந்தனர் அப்போது கோயில் சாவி பித்தர் புரத்திலிருந்து காலையில் பல்லக்கில் வைத்துக் கொண்டுவரப்பட்டு பூசைமுடிந்து இரவு மீண்டும் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் சாவி வரும்வரை தீட்சிதர்கள் கோயில் வாசலில் காத்துக்கிடந்தார்கள். பின்னர் பிச்சாவரம் பாளையக்காரர் கோயில் சாவியை தீட்சிதர்களே வைத்துக்கொண்டு பூசையை சரியாகச் செய்யுமாறு பணித்திருக்கிறார். இக்காலகட்டத்தில்தான் அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்தான் பூசைசெய்யவந்த தீட்சிதர்கள் கோயில் நிர்வாகத்தை மெல்ல மெல்ல கைப்பற்றியிருக்கவேண்டும். இது ஒருபுறமிருக்க வழிபாட்டு முறைகளில் பல மாற்றங்களை இதற்கு முன்பே தீட்சிதர்கள் செய்திருக்கின்றனர். சிவபெருமான் 'தென்னாடுடைய சிவன்' எனக் குறிப்பிடப்படுகிறார். சிவ ஆகம முறைப்படிதான் நடராசருக்கு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லா சைவக்கோயில்களிலும் பாடப்பட்ட தேவாரம் முழுவதும் சிதம்பரம் நடராசர் கோயிலில்தான் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. ஓலைச்சுவடியில் இருந்தால் தேவாரம் அழிந்துவிடும் என்று கருதிய முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் நரலோக வீரன் காலிங்கராயன் அவற்றை செப்பேடுகளில் பதித்து சிதம்பரம் கோயில் சிற்றம்பலத்தில் வைத்தான் (சிற்றம்பலம் எனும் சொல்லே சிதம்பரம் என்றாயிற்று) என்ற செய்தி முத்திறந்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு ஒத்தமைத்த செப்பேட்டின் உள் எழுதி-இத்தலத்தில் எல்லைக் கிரிவாய் இசை எழுதினான் கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தே சென்றுஎன்று கல்வெட்டில் குறிப்பிடப்ட்டுள்ளது. இப்படி நம் தமிழ் மன்னர்கள் தேவாரத்தை பாதுகாத்து வைத்த இடத்திலேயே இன்று அதனைப் பாட இயலாத சூழல் ஏற்பட்டதனால்தான் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் கடந்த பத்து ஆண்டுகளாகப் போராடினார். இதற்கும் முன்பு இதே கோரிக்கைக்காக தமிழ்காப்பணி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் பேராசிரியர் மெய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது அக்கோரிக்கையை அப்போதைய அரசு கண்டுகொள்ளாததனால் குடமுழுக்கு வேள்வித் தீயில் வீழ்ந்து மாய்வோம் என இறுதி எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய நீண்ட போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையத் தலைவர் வழக்கரிஞர் ராசு ஒருங்கிணைப்பில் தமிழ்தேச பொது உடைமைக் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் , மக்கள் கலை இலக்கியக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராடி வெற்றி பெற்றதன் விளைவாக இன்று கோயில் நிர்வாகம் அரசின் கைக்கு வந்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மக்கள் என்னநினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்வதற்காக ஒரு சிலரைச் சந்தித்தோம்.அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை முன்னாள் தலைவரும் இந்திய மக்கள் சக்தி இயக்கத்தின் இந்நாள் தலைவருமான பேராசிரியர் அ.சண்முகம் கூறும்போது கோயில் சொத்துகள் அடையாளம் கண்டு மீட்கப் படவேண்டும், இதுவரை இக்கோயிலையே நம்பி வாழ்ந்துவிட்ட தீட்சிதர்களின் மறுவாழ்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். கோயிலுக்கு 918 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதில் 466 ஏக்கர் மட்டுமே ஏனொ தனோவென்று குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கரிஞர் சி.ரமேசு நடராசர் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றதன் மூலம் சிதம்பரத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது கருமாரியம்மன் கோயில் வருமானத்தில் தான் கலைக்கல்லூரி உருவானது. தீட்சிதர்களிடம் நிருவாகப் பொருப்பு இருந்த போது எவ்வளவு வருமானம் வந்தது என்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டார். கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றது சரிதான் ஆனால் எல்லா கோயில்களையும் நிர்வகிப்பதுபோல் நடராசர் கோயிலை நிர்வகிக்கக்கூடாது, வழிபாட்டு முறையில் அரசு தலையிடக்கூடாது என்று தமிழ்நாடு வைணவ சபை சிதம்பரம் பகுதி துணைத்தலைவரும் பாரதிய சனதாக் கட்சியின் மாவட்டப் பொருளாளருமான கோபாலகிருட்டிணன் கருத்து தெரிவித்தார். தமிழ்தேசப் பொது உடைமைக் கட்சி கி.வெங்கட்ராமன் கூறும்போது எங்களுக்கு வழிபாட்டு முறையில் நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழ் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் போராடினோம் இனி எத்தகைய வழிபாட்டு முறை தொடரவேண்டும் என்பதை பக்தர்கள்தான் முடிவு செய்யவேண்டும் அதற்காக பக்தர்கள் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார். பக்தர்கள் யாரும் இதற்காகப் போராட முன்வரவில்லை நாத்திகர்கள்தான் போராடுகின்றனர் என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு. பக்தர்களுக்கு உரிய உரிமையைக் கொடுத்தால் நாங்கள் எதற்காகப் போராடப் போகிறோம் என்றார் தமிழ் தேசப் பொது உடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் சிவப்பிரகாசம். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அரசு கோயில் நிர்வாகத்தை நடத்துமா? நன்றி; தமிழ் ஓசை-களஞ்சியம்

13 பிப்ரவரி, 2009

புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு


புவி வெப்பமடைவதற்கும் அதனால் பருவ நிலை மாறுபடுவதற்கும் மனிதச் செயல்களே காரணம் என்பதை உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் உறுதிப் படுத்தியிருக்கின்றனர்.அதிலும் குறிப்பாகப் பணக்கார நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான் தங்களது வேகமான வளர்ச்சிக்காகவும், ஆடம்பரத் தேவைகளுக்காகவும் புவியை வெப்பமடையச் செய்துள்ளன என்பது உலகறிந்த உண்மை. புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் முயற்சி 1992 ஆம் ஆண்டு ரியோ-டி- செனிராவில் நடந்த உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1997 இல் கியூட்டோ உடன்படிக்கை எட்டப்பட்டது. ஒவ்வொரு நாடும் அது வெளியேற்றும் கரியமிலக் காற்றைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதுதான் அந்த உடன்பாட்டின் நோக்கம். உலகிலேயே அமெரிக்காதான் அதிக அளவு கரிக்காற்றை வெளியிடுகிறது எனவே அமெரிக்கா இவ்வுடன்பாட்டிற்கு ஒத்துழைக்க மறுத்தது. புவி வெப்பமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் துருவப் பகுதிகளிலுள்ள பனிமலைகள் உருகிக் கடலில் கலக்கும் அதனால் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது அதனால் உலகம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதால் மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வைப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செய்து வருகின்றன. இதழாளர்கள், எழுத்தாளர்கள், ஒளிப்படக்கலைஞர்கள் என அனைவரும் அவரவர் இயங்குதளத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் எச்.பி.கணினி நிறுவனமும் சேஞ்சுரி வைல்டு லைப் நிறுவனமும் இணைந்து பெட்டர் போட்டோ கிராபி இதழில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகள் என்ற தலைப்பில் ஒளிப்படப் போட்டி ஒன்றை அறிவித்தனர். இந்தியாவிலுள்ள முன்னணி ஒளிப்படக் கலைஞர்கள் பலர் இப்போட்டியில் கலந்து கொண்டனர் முதல் பரிசு சுப்ரியா பிஸ்வாஸ் என்ற பெண்மணிக்குக் கிடைத்தது. இரண்டாவது பரிசாக மடிக்கணினி நம் தமிழர் ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது என்பதில் நமக்குப் பெருமை. அவர் நெய்வேலியைச் சேர்ந்த சான்பாஸ்கோ என்பதில் கடலூர் மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை. இப்படத்தை மிக நுட்பமாகப் பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார். பொதுவாக ஒரு படம் எடுப்பதற்கு ஒரு வினாடியில் அறுபதில் ஒரு பங்கு நேரம் போதுமானது ஆனால் இப்படத்தை இவர் எடுப்பதற்கு செலவிட்ட நேரம் பத்து வினாடிகள். இரவு பத்தேமுக்கால் மணிக்கு இப்படத்தை எடுத்துள்ளார்.பத்து வினாடிகளில் இவ்வானத்தை இவ்வளவு புகை மண்டலமாக்க முடியுமானால் காலகாலத்திற்கு இவ்வானத்தில் எவ்வளவு மாசு சேறுமோ? என்ற கவலையோடுதான் இப்படத்தைத் தான் பதிவு செய்ததாகக் கூறினார். நம் வசதிக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கொதி உலையால் காற்று மண்டலம் இப்படி மாசுபடுகிறதே என்ற குற்ற உணர்வை நம்மிடையே இப்படம் ஏற்படுத்துகிறது. புவி வெப்பமடைவதை நம்மால் இயன்ற அளவு குறைக்க வேண்டும் என்ற சிந்தனையை ஒவ்வொரு மனிதரிடமும் இப்படம் ஏற்படுத்தும் என்றால் அது சான்பாஸ்கோவுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

1 பிப்ரவரி, 2009

உலகப்புகழ்பெற்ற திருவதிகைச்சிற்பங்கள்





கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகையில் செய்யப்படும் மரச்சிற்பங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கோயில்களையும் வீடுகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன என்பது தமிழர்களுக்கு பெருமைசேர்க்கும் செய்தியாகும்.
கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச்செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள்,சூரியப்பலகைகள் என அனைத்துவகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச்சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் இரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.
1947ஆம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்ரமணிய ஆச்சாரி,பொன்னுசாமி ஆசாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதிகோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான இராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி,இராசாராம் ஆச்சாரி,இராதாகிருட்டிண ஆச்சாரி,தேவா ஆகியோர் இக்கலைப்பணியை இன்றும் தொடர்கின்றனர்.
கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு அவ்விலக்கணப்படி தேரைவடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இடத்தில் அளவைப்பொறுத்தே தேரின் அளவை அமைக்கவேண்டும் என்றவிதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.
தேரில் பத்து வகையுண்டு; ஸ்ரீகரம்,த்வஜம்காந்தம்,ரேஷிகேசம்,நிகேதுனம்,ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம்,பத்மக்கம்,பத்ரம்,சிவம் என்று குறிப்பிடப்படும் இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது.இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார்.இவர் திருவண்ணாமலை, செவ்வாய்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களின் கோயால்களுக்குத்தேர் செய்துள்ளார்.
தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும் அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும் மேல் பாகம் தேக்கு,வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு ஆவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி,ஐதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச்சென்று தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக்கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீரு மலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச்செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணரிய போது இராசாராம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
வழுவூர் ராமையா அவர்களின் ஆலோசனையோடு இராதாகிருஷ்ணன் ஆச்சாரி உருவாக்கிய நடராஜர் சிற்பம் திருவள்ளூரில் இன்றும் உள்ளது. புருஷோத்தம ஆச்சாரி கடவுளர்களின் வாகனங்கள் பற்றிக் கூறும்போது, சிங்கம், காளை, கருடன், அன்னம், பாம்பு என பல்வேறு விலங்குகளின் உருவங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார். வாகனங்கள் செய்வதற்கு விலங்குகளின் அடிப்படை வடிவத்தை அத்தி மரக்கட்டைகளில் செதுக்கி வடிவமைக்கின்றனர். அத்திமரம் எடைக்குறைவு என்பதனால் அம்மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு வஜ்ரம்,மரத்தூள், பிலாஸ்டர் ஆஃப் பாரிஸ் ஆகியவற்றைக்கலந்து கூழ் உருவாக்கி வடிவங்களை மெருகேற்றுகின்றனர். அதன் பிறகு உப்புத்தாள் கொண்டு வழுவழுப்பாக்கி வண்ணம்பூசுகின்றனர்.வண்ணம்பூசப்பட்ட வாகனங்கள் மரச்சிற்பந்தானா? எனக் காண்போரை ஐயமுறச்செய்கின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து நாள்தோறும் கடவுளர்களின் வாகனங்கள் புதுப்பிப்பதற்காக திருவதிகை நோக்கி வந்தவண்டம் உள்ளன.
தேர், வாகனங்கள் இவற்றைவிடவும் அதிக அளவு சூரியப்பலகைகள் செய்வது இவர்களின் அன்றாட பணியாகும். சூரியப்பலகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, பண்பாடு, மொழி,சமய வேறுபாடுகளுக்கேற்ப அவர்கள் விரும்பும் சிற்பங்களை உருவாக்குகின்றனர். இதற்கு பெரும்பாலும் பர்மாதேக்கு மரங்களைப் பயன்றடுத்துகின்றனர்.செதுக்கவேணடிய உருவத்தைத் தாளில் வரைந்து அதனைப் பலகையில் ஒட்டி சிறு உளிகொண்டு செதுக்குகி சிற்பத்தை உருவாக்குகின்றனர்.
இக்கலைப்பணியைத் தொன்றுதொட்டு செய்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறைக் கலைஞர்களாக தங்கள் வாரிசுகளை உருவாக்கி வருவதோடு இப்பணியில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கின்றனர்.
கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது இது வரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழர்களின் தொன்மக்கலையில் சிறந்துவிளங்கும் இவர்களைத் தமிழக அரசு பெருமைப்படுத்த வேண்டும்.