இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

14 ஜனவரி, 2009

பொங்கல் கோலம்



கால் நூற்றாண்டுக்கு முன்பு மார்கழி பிறந்தால் போதும் சிற்றூர்களில் இளம்பெண்கள் தாளும் கையுமாகத்தான் காட்சியளிப்பார்கள் மறுநாள் வாசலில் இடவேண்டிய கோலத்தைப் போட்டுப் பார்த்தால்தான் இரவு நிம்மதியாகத்தூங்க முடியும், சற்று பொருளாதார வசதி குறைந்தவர்கள் ராமக்கட்டியால் தரையில் போட்டுப் பார்த்து விடுவார்கள். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பசுஞ்சாணத்தைக் கரைத்து வாசலில் தெளித்து துடைப்பத்தால் பெருக்கித் தரையைப் பசுமையாக்கி பச்சரிசி மாவினால் கோலமிடுவது வழக்கம். ஏழ்மை நிலையிலிருப்பவர்கள் கூட பச்சரிசி மாவைத்தான் கோலமிடப் பயன்படுத்துவர். பெண்களின் திறமைக்கேற்பவும் மனநிலைக்கேற்பவும் கோலம் அமையும். ஒருசிலர் சிக்குக் கோலமிடுவதில் கைதேர்ந்தவர்களாக விளங்குவர், வேறுசிலருக்கு பூக்கோலம் வரைவது பிடிக்கும். சிக்கல் கோலமிடுவதில் வல்லவராயிருந்தால் அவர் வாழ்க்கைச் சிக்கலாகிவிடும் என்ற நப்பிக்கை பெணகளிடையே உண்டு. புள்ளிகளைப் போதிய இடைவெளியில் இடுவது கோடுகளைப் பிசிறில்லாமலும், வளைவு நெளிவுகளை இலாவகமாகவும் வரைவது கோலத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்களாகும். கோலம் வரைந்து முடித்ததும் ஒரு சோடி சாணிப் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் தலையில் பரங்கிப் பூக்களைச் செருகி வைப்பதுண்டு. மாலையில் அந்த சாணிப் பிள்ளையாரை சிறு வரட்டியாகத் தட்டி அதன் மீதிருந்த பரங்கிப் பூவை வரட்டியில் ஒட்டி விடுவர். இது போல் தேவையான அளவு வரட்டிகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு பொங்கலன்று அந்த வரட்டிகளைப் பற்ற வைத்து அடுப்பு மூட்டி பொங்கல் உலை வைப்பது வழக்கம். கோலம், பெண்களுக்கான ஒரு கலை வடிவம் என்றாலும் ஒரு சில ஆண்களும் அக்கலையில் வல்லவர்களாக விளங்குகின்றனர். இன்றும் சிற்றூர்களில் வாசலுக்கு முன் கோலமிடும் ஆண்களும் உண்டு. தாயிடமிருந்து கோலமிடக் கற்றுகொள்வதைப் போல் தந்தையிடமிருந்தும் கற்றுக்கொள்ளும் மகள்கள் உண்டு. கோலம், தமிழ்ப் பண்பாட்டின் நுட்பமான பகுதிகளை வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். விருந்தோம்பல்தான் தமிழ்ப் பண்பாட்டின் உச்சம் எனக் கருதப்படுகிறது. அத்தகைய விருந்தோம்பல் பண்பை சக மனிதர்களையும் தாண்டி புவிக்கோளத்தில் வாழும் ஓர் எளிய சிற்றுயிரிடமும் வெளிப்படுத்துகின்ற பாங்குதான் அரிசி மாக்கோலமாகும். எறும்புகள் கோலமாவை விருந்துண்டு செல்லும் காட்சிகளை சிற்றூர்களின் வீடுகள்தோறும் காணலாம். இன்றைய குழந்தைகள் அந்தக் காட்சிகளைக் காண இயலாமல் போனதுதான் பண்பாட்டு அவலம். கோலத்தை வீட்டின் முன்பு போடுவதென்றால் மாக்கோலமாகவும் உள்ளே போடுவதெனறால் மாவை நீரில் கரைத்து நீர்க்கோலமாகவும் போடுவது வழக்கம். காய்ந்த பிறகு பளிச்செனத் தெரியும் மெல்லிய மாவையும் எறும்புகள் உண்ணும். உழவர்கள் வீட்டில் விளைந்த தானியத்தில் ஒரு சிறு பகுதியை சிற்றுயிர்களுக்கு ஈந்து மகிழும் ஒரு உயிர் நேயக் கலையான கோலக்கலை இன்று அதன் தனித்தன்மையை இழந்து கல்மாவாலும், வண்ணத்தூள்களாலும் வரையக்கூடிய வெறும் அழகுக்கலையாகவும், வணிகக்கலையாகவும் சிதைந்துள்ளது. முன்பெல்லாம் பொங்கலன்று இடப்படும் கோலத்தில் பானை, கரும்பு, மாடு எனப் பொங்கலுக்கான அடையாளங்கள் காணப்படும். இன்று அது பிணீஜீஜீஹ் ஜீஷீஸீரீணீறீ ஆக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நம் வீட்டுப்பெண்கள் ஆங்கில வழியில் கல்வி பயில்வதன் அடையாளம் நம் வீட்டு வாசலில் வரையப்படும் கோலம் வரை நீண்டுள்ளது. ரங்கோலி எனப்படும் உலகப்பொதுக் கோலமும் நம் வாசலுக்கு வந்தாயிற்று. கோலத்திற்கும் அதன் பண்பாட்டுத் தொன்மைக்கும் இனித் தமிழன் உரிமை கொண்டாட முடியாது. அதற்கும் எந்தக் கொம்பனாவது மரபுரிமை வாங்கி வைத்திருக்கக்கூடும். இப்படி ஒவ்வொரு துறையிலும் நாம் ஊடகங்களிடம் கற்றுக்கொண்டு நமக்கான வட்டார மரபுகளையெல்லாம் மறந்து, நம் தனித் தன்மைகளை இழந்து பண்பாட்டு அனாதைகளாகத்தான் நிற்க வேண்டுமா ? இந்தப் பொங்கல் திருநாளில் உறுதியேற்போம். இந்த அலங்கோலம் மாற வேண்டும். பண்பாட்டுக்கூறுகள் ஒவ்வொன்றிலும் நம் தனித்தனமைகளைப் பேணிக்காப்போம். தமிழர்களின் பண்பாட்டு நுட்பங்களை உலகுக்குப் பறைசாற்றுவோம்.

4 கருத்துகள்:

  1. பாராட்டுகள்.
    கோலம் பற்றிய பதிவு சிறப்பு.
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    பதிலளிநீக்கு
  2. ”ரங்கோலி எனப்படும் உலகப்பொதுக் கோலமும் நம் வாசலுக்கு வந்தாயிற்று. கோலத்திற்கும் அதன் பண்பாட்டுத் தொன்மைக்கும் இனித் தமிழன் உரிமை கொண்டாட முடியாது.”

    அட இதையும் மற்றவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டாச்சா??? இனி நமக்கு என்று வேறு என்ன தான் இருக்கு இங்க உரிமை கொண்டாட....?

    பதிலளிநீக்கு
  3. திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் இன்று 07.05.2014 வலைச்சரத்தில் இந்தத்தங்களின் பதிவினை பாராட்டி அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள்.

    அதன் மூலம் இங்கு வருகை தந்துள்ளேன்.

    அழகாக கோலமிட்டு வரவேற்பு அளித்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வலைச்சர இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2014/05/blog-post_7.html

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை சார். இது என்னுடைய பெண்மொழிக் கட்டுரை :) http://honeylaksh.blogspot.in/2013/05/blog-post_27.html. வலைச்சரத்தில் உங்களைப் பற்றிப் படித்தேன். :)

    பதிலளிநீக்கு