இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

19 ஏப்ரல், 2009

ஈழத்தமிழர்களைக் காக்க கடவுளிடம் புகார் கொடுத்த படைப்பாளிகள்





போரில் செத்து மடியும் அப்பாவி ஈழத்தமிழர்களைக்காக்க வேண்டி தமிழகத்தில் நாள்தோறும் வெவ்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் விருத்தாசலத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டம் இது வரை எங்கும் நடக்காத ஒரு போராட்டம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பாமர மக்களைத் தூண்டுவதே இப் போராட்டத்தின் நோக்கம். நாட்டுப்புற மக்களிடையே சில நம்பிக்கைகள் காலகாலமாகப் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மூட நம்பிக்கை என நாம் எளிதில் புறம்தள்ளிவிடலாம் ஆனால் அம்மக்கள் அவற்றை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட மாட்டார்கள். அம்மக்களின் உள் மனதில் புதைந்து கிடக்கும் அத்தகைய ஒரு நம்பிக்கையை போராட்ட வடிவமாக்கியிருக்கின்றனர் படைப்பாளிகள். தமக்குத் துன்பம் தரும் ஒருவரை எதிர்ப்பதற்கோ தண்டிப்பதற்கோ மனிதர்களுக்கு உரிய அனைத்து வழிகளாலும் இயலாத போது நாட்டுப்புற மக்கள் நாடக்கூடிய கடைசி புகலிடம் அவர்களின் குல தெய்வம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி இந்த நம்பிக்கை சார்ந்ததுதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தவறுசெய்தவர்களைத் தண்டிக்கவேண்டி குல தெய்வக்கோயிலில் சீட்டு எழுதி கட்டுவர். அவர்கள் நம்பிய படி தவறு செய்தவருக்கு உரிய தண்டனை கிடைத்ததும் கோயிலில் கட்டிய சீட்டை காணிக்கை செலுத்தி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் சீட்டு கட்டியவரையே கடவுள் தண்டிப்பார் என்பது நம்பிக்கை. இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை உலகெங்கும் உள்ள மக்கள் சக்தியால் தடுத்து நிறுத்த இயலாத நிலையில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவனாவது ராசபக்சேவை தண்டிக்கட்டும் என்கிற தொனியில்தான் இப்போராட்டம் நடந்துள்ளது. விருத்தாசலத்தின் தெற்கே மூன்று கல் தொலைவில் உள்ளது வேடப்பர் கோயில் துட்டதெய்வம் எனக்கருதி மக்கள் இதனை பய பக்தியோடு வழிபடுவர் சாலையில் செல்லும் ஊர்தி ஓட்டிகளில் பெரும்பாலானோர் வேடப்பர் கோயிலுக்கருகில் செல்லும் போது ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி சூடம் கொளுத்தி கும்பிட்டுவிட்டுத்தான் கடந்து செல்வர். விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்களுக்கு இது குல தெய்வம் நினைத்தது நடக்கவேண்டி சீட்டு எழுதி கட்டும் வழக்கம் இன்றும் இங்கு நடைமுறையில் உள்ளது.கடவுளுக்கு கொடுக்க வேண்டிய புகார் மனுவைத் தாளில் எழுதி பூசாரியிடம் கொடுக்க அதை அவர் பனை ஓலையில் எழுதி சீட்டையும் ஓலையையும் வட்ட வடிவில் வளையல் போல சுற்றி தெய்வத்தின் முன் வைத்து படைத்து புகார் கொடுக்க வந்தவரிடமே கொடுத்து சூலத்தில் மாட்டச் செய்வார். இதைத்தான் படைப்பாளிகளும் செய்தனர்.விருத்தாசலம் பாலக்கரையிலிருந்து பம்பை இசை முழங்க ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளிகள் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையைப் பற்றி உறுக்கமாக பாடிய படி ஊர்வலமாக வேடப்பர் கோயிலுக்குச் சென்று சீட்டு எழுதி கட்டினர்.அவர்கள் கடவுளிடம் கொடுத்த புகார் மனு இதுதான் " நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2040 சித்திரைத் திங்கள் 2 ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் அருள் மிகு வேடப்பரை குலதெய்வமாகக் கொண்ட நாங்கள், தங்களுக்கு எழுதிக்கொள்ளும் பிராது. நமது தமிழ் உறவுகளாகிய அப்பாவி ஈழத் தமிழர்களை நச்சுக் குண்டு வீசி கொடூரமாகக் கொன்று குவித்து வரும் கொலைகாரன் ராசபக்சேவையும் சரத் பொன்சேகாவையும் தண்டித்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு வேண்டி இச்சீட்டினைத் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். இதற்கு படிக்கட்டணமாக ரூ.11 செலுத்திவிடுகிறோம். தாங்கள் தண்டனையை உறுதியாக நிறைவேற்றியதும் அதற்கு பரிகாரமாகப் படிக்கட்டணமும் சிறப்பும் செய்து புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்". இந்த புகார் மனுவை படைப்பாளிகள் சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் ஆதித்யாசெல்வம் கொடுக்க படைப்பாளிகள் கண்மணிகுணசீகரன், தங்கவெங்கடேசன், தெய்வசிகாமணி, ஆறு.இளங்கோவன், புதூர்சாமி,மணிவண்ணன்,செம்புலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் செல்லும்போது உடுக்கை இசை கேட்டு ஆவேசமாக ஆடி ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தைக் கவர்ந்தார். இது போல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிறு தெய்வக் கோயில்களிலும் சீட்டு எழுதி கட்டும் போராட்டம் தொடரும் என படைப்பாளிகள் பேரியக்க நிருவாகிகள் தெரிவித்தனர். காண்க தமிழ் ஓசை களஞ்சியம்

2 கருத்துகள்:

  1. தமிழ்ப் பேசும் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று ஈழத் தமிழர் தந்தை செல்வா அவர்கள் தனது இறுதிக் காலகட்டத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு அமையவே இந் நிகழ்வு நடைபெற்றிருப்பதாக நான் கருதுகிறேன். ஏதோ ஈழத் தமிழர் வாழ்வில் நிம்மதி ஏற்பட யார் எது செய்தாலும் அவர்களை நாம் மதிக்கின்றோம். வரவேற்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  2. அவர்களது நம்பிக்கை வெற்றிபெறட்டும்.

    பதிலளிநீக்கு