இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

3 மே, 2009

மாறிவரும் தேர்தல் பரப்புரைகள்

தேர்தல் காலங்களில் கட்சிகள் தங்களின் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பதற்கு இன்று நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் கால் நூற்றாண்டுக்கு முந்தைய தேர்தல் காலம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. சுவர் விளம்பரம், தட்டி விளம்பரம், மிதிவண்டி பரப்புரைப் பயணம், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்கு கேட்பது எனப் பல வகையான விளம்பர உத்திகளைப் பின்பற்றிக் கட்சித் தொண்டர்கள் விரும்பிச் செயலாற்றுவர். அன்றைய சுவர் விளம்பரங்கள் மிகவும் எளிமையானவை. சிற்றூர்களில் தொண்டர்களே எவ்விதக் கைம்மாறும் கருதாமல் சுவர் விளம்பரங்களைச் செய்வார்கள். எழுத்துகள் அழகாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை சின்னம் தெரிந்தால் போதும். பனைமட்டையின் நுனியை நசுக்கி தூரிகைத் தயாரித்து காவியைக் கரைத்து வண்ணமாக்கி உள்ளூர் வளங்களைக் கொண்டே பொருள் செலவில்லாத சுவர் விளம்பரங்கள் தொண்டர்களால் செய்யப் பட்ட காலம் அது. பள்ளிக் குழந்தைகள் கூட கரித்துண்டுகளைக்கொண்டு சுவரில் சின்னத்தையும் வேட்பாளரின் பெயரையும் அவர்களுக்கே உரிய கிருக்கல் எழுத்துகளால் வரைந்தும் எழுதியும் வைப்பர். அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக தகரத்தில் வெட்டப்பட்ட சின்னங்கள் சிற்றூர்களுக்கு வந்தன. நமது சின்னம் என்று மேலே எழுதி அதன் கீழே சின்னத்தின் படம் வெட்டப்பட்டிருக்கும் அந்தத் தகரத்தை சுவரில் வைத்துப் பிடித்துக்கொண்டு வெட்டப்பட்ட பகுதியில் தூரிகையால் வண்ணத்தைப் பூசினால் சுவரில் விளம்பரம் தயார். தட்டி விளம்பரங்களும் அது போலவே. கட்சிக்காரர்களின் வீட்டுக் கொல்லையிலுள்ள மூங்கில் மரத்தை வெட்டிப் பிளந்து தேவையான அளவுக்குத் தட்டி செய்து அதில் பழய செய்தித்தாள்களை ஒட்டி அதன் மீது வெள்ளைத் தாள்களை ஒட்டி தேவையான வண்ணப் பொடிகளைக் கரைத்து வஜ்ரம் கலந்து தட்டியில் எழுதி தெருக்களில் வைப்பர். அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக வண்ணச் சுவரொட்டிகள் சிற்றூர் சுவர்களை அலங்கரித்தன.கட்சியின் கிளைச் செயலாளர் நகரத்திற்குச் சென்று சுவரொட்டிகளைப் பெற்று வருவார். பயன்படுத்த முடியாத மிதிவண்டி டயர்களில் வெள்ளைத் தாள்களை ஒட்டி அதையும் விளம்பரத் தட்டிகளாகப் பயன்படுத்துவர். தொண்டர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவரவர் மிதிவண்டியில் கட்சிக் கொடியைக் கட்டிக்கொண்டு வரிசலாக அணி வகுத்து போடுங்கம்மா ஓட்டு ..............ய பாத்து என்று முழக்கமிட்டபடி பக்கத்து ஊர்களுக்கு சென்று அங்குள்ள தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டு செல்வர் ஒவ்வொரு ஊரிலும் தொண்டர்கள் சேரச் சேர மாபெரும் பேரணி போலாகிவிடும் தொண்டர்களின் முழக்க ஒலி கேட்டு வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வந்து ஆர்வமாக எந்தக் கட்சியினர் எனப் பார்ப்பதுண்டு. இது போல் பரப்புரை செய்ய வேண்டும் என்று யாரும் தொண்டர்களை வற்புறுத்துவதுமில்லை அதற்காக அவர்களுக்கு எந்தவித மதிப்பூதியமும் வழங்குவதுமில்லை. வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கும்போது நெகிழியால் செய்யப்பட்ட அவர்களின் கட்சி சின்னத்தை வழங்கி வாக்கு கேட்பது மரபு. குழந்தைகள் அந்த சின்னத்தை விரும்பி வாங்கி சட்டைப் பொத்தானில் செறுகிக் கொள்வர். தேர்தல் பரப்புரைக் கூட்டங்களும் முன்பு போல் இப்போதில்லை. தலைவர்கள் பரப்புரைக்கு வருகிறார்களென்றால் ஒரு வாரத்திற்கு முன்பே சுற்றியுள்ள சிற்றூர்களுக்கெல்லாம் ஒலிப் பெருக்கி மூலம் அறிவித்து விடுவார்கள். பொது மக்களுக்கு இடையூறில்லாத இடங்களில் மேடை அமைக்கப்படும் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் கூட்டங்கள் நடக்கும் மக்கள் வேலைகளை முடித்துக்கொண்டு கூட்டத்திற்கு வருவதற்கு ஏதுவாக இருக்கும். கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தலைவர்கள் முன்கூட்டியே வந்து முக்கியத் தொண்டர் ஒருவர் வீட்டில் தயாராகியிருக்கும் உணவை உண்டு அவ்வூர்த் தொண்டர்களோடு அளவளாவிய பிறகு கூட்டத்திற்குச் செல்வார். கூட்டத்தில் தலைவருக்கு மாலையோ பொன்னாடையோ அணிவிக்க விரும்பபவர்கள் வரிசையில் நின்று அணிவிப்பார்கள். இப்போது உள்ளது போல் பாதுகாப்பு கெடுபிடிகள் அப்போது இல்லை. கூட்டங்களுக்கு ஊதியம், உணவு கொடுத்து ஆள் சேர்க்க வேண்டிய அவசியம் அப்போது இல்லை. நம்முடைய வாழ்க்கைத் தரத்தை ஓரங்குலமாவது உயர்த்துவதற்கு நம் தலைவர் பாடுபடுவார் என்ற நம்பிக்கைத் தொண்டர்களிடமிருந்தது. இப்போது அந்த நம்பிக்கையோடு வினாக்குறியும் சேர்திருக்கிறது.கைம்மாறு கருதாத தொண்டர்களும் தன்னலம் கருதாத தலைவர்களும் இன்று இத்தகைய பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொண்ட கக்கன் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிய சாமிக்கண்ணு தொண்டர்களை உயிராகக் கருதிய எம்.ஆர்.கிருட்டிணமூர்த்தி போன்ற வட்டாரத்தலைவர்கள் மக்களிடையே புகழ்பெற்று விளங்கினர். தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டுவதற்கு அவர்களிடம் பெரிதாகச் சொத்துகள் இருந்ததில்லை.தெருப்புழுதி கால்களில் படிய வீதி வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை நேரில் சந்திந்து வாக்கு கேட்டனர். அமர்ந்துகொண்டே கேட்பதற்குக் குளிரூட்டப் பட்ட மகிழுந்துகள் அவர்களிடம் இல்லை. தேர்தல் பணிகளைத் தொண்டர்கள் தமது ஊர்த் திருவிழாப் பணிபோன்று செய்தனர்.அவர்கள் வீட்டுச் சுவர்களில் அவர்களே விளம்பரம் செய்ததனால் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய தேவை இருந்ததில்லை. இன்று அரசியல் கட்சிகளெல்லாம் வணிக நிறுவனங்களாகி விட்டதனால் எல்லாவற்றுக்கும் ஒரு விலை குறித்தாயிற்று வாக்கு உட்பட. காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக