இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

22 மார்ச், 2009

ஈழத்தமிழர் முகாமின் அவல நிலை





ஈழத்தில் போர் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் இது இன்றைய நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போல போர் கடுமையாக நடைபெற்ற போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க இயலாமல், உயிர் வாழவும் இயலாமல் ஏதிலியராகப் பலர் தமிழகத்திற்கு வந்தனர் அவர்களில் நூறு குடும்பத்தினர் விருத்தாசலம் வந்தனர். அவர்களுக்குக் கடலூர் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் பின்புறமுள்ள இடத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள தற்காலிகக் கொட்டகை அமைத்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். நூறு குடும்பங்களில் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்கு சென்றுவிட ஒரு சிலர் வேறு முகாம்களுக்குச் சென்றுவிட இன்று விருத்தாசலம் முகாமில் ஐம்பத்தெட்டு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு மாதத்திற்குக் குடும்பத்தலைவருக்கு ரூ.400, தலைவிக்கு ரூ.250, ஒரு குழந்தைக்கு ரூ.90 வழங்கப் படுகிறது. மேலும் சலுகை விலையில் மாதத்திற்கு அரிசி 12 கி., மண்ணெண்ணெய் 6 லி., சர்க்கரை 2கி. வழங்கப் படுகிறது. விருத்தாசலம் முகாமிலுள்ளவர்கள் அனைவருமே இலங்கையில் மீன் பிடித் தொழிலைச் செய்தவர்கள் அவர்களுக்கு சொத்து எனச் சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் மீன் பிடித்தொழிலில் கிடைத்த நல்ல வருமானத்தைக் கொண்டு தரமான வாழ்க்கை நிலையில்தான் அங்கு இருந்திருக்கின்றனர். ஏதிலியராக இங்கு வந்த பின்பு அவர்களுக்குத் தெரிந்த அவர்களின் குலத்தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கவில்லை நம் அரசு. எனவே வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளுக்கு வண்ணமடிக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் அரசு வழங்கும் உதவித் தொகையையும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அரசு தற்காலிகமாக இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுத்த அந்த குடிசைகளை இதுவரை மாற்றவுமில்லை பராமறிக்கவுமில்லை. குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்ததும் ஒரு சிலர் இரண்டு வீடுகளை ஒன்றாக்கி சிமிட்டி ஓடுகளைக் கொண்டு மழை, வெய்யிலிலிருந்து பாதுகாத்துக் கொண்டுள்ளனர். இயலாதவர்கள் விதியை நொந்துகுண்டு அரசு அமைத்துக்கொடுத்த அதே குடிசையில் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவிப்பதற்காக அவர்களுள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் நாளடைவில் அவர் ஊழல் பேர்வழியாகிவிட தற்போது வேறு ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து மீண்டும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். பாவம் அவர்கள் வேறு என்ன செய்ய முடியும். முந்தைய ஆட்சியில் இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது தற்போது பகலிலும் வழங்கப் படுகிறது அதானால் மின் கட்டணம் அதிகமாகி விட்டதாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் புலம்புகின்றனராம் அது எப்போது நிறுத்தப் படுமோ என்ற அச்சத்திலுள்ளனர். முகாமில் கழிவறைகள் உள்ளன அவற்றைப் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர் ஆண்கள் திறந்த வெளியில்தான். கழிவு நீர் சேமிப்புக் குழி நிரம்பி நீண்ட நாட்களாகிறது அதனை சுத்தம் செய்வதற்காகப் பல முறை கோரிக்கை விடுத்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. குடி நீர் இணைப்பு கொடுத்துள்ளனர் ஆனால் தண்ணீர்தான் வராது எனவே மூன்றடி ஆழமுள்ள குழி அமைத்து அதனுள்ளிறங்கி தண்ணீர் பிடித்துக்கொள்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலுள்ள முகாம்களில் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குச் செல்லவேண்டுமெனில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதிக்காகச் செல்கிறவர்களிடமும் கையூட்டு கேட்டு அலை கழிக்கின்றனர் நம் மதிப்பிற்குரிய அலுவலர்கள். அப்படியும் அனுமதி கிடைத்து வெளியூர் செல்லும் போது மாத உதவித்தொகைக் கொடுப்பதற்காக அலுவலர்கள் வந்து விட்டால், அவர்களுக்குரிய உதவித் தொகையை குடும்பத்திலுள்ள பிறரிடம் கொடுப்பதில்லை. மீண்டும் அவர் ஊரிலிருந்து வந்த பிறகு வட்டாட்சியர் அலுவலகம் சென்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் அவருக்குரிய உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் விசயகாந்து இதுவரை ஒரு முறை கூட அந்த முகாமுக்குள் சென்று பார்க்கவில்லை.அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்ன? முகாமிலுள்ள வீடுகளுக்கிடையே ஒற்றையடிப் பாதை அளவுக்குத்தான் இடமுள்ளது. போதுமான நிலப்பரபு இருந்தும் நெறுக்கமாக வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் காற்றோட்ட வசதியில்லை. எனவே அரசு இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிய அவ் வீடுகளைப் பராமறிப்பதற்காக அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு, அவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டுமென வட்டாட்சியட் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நகர வளர்ச்சியில் அக்கரையோடு செயல்பட்டு வரும் கோட்டாட்சியர் ஈழத்தமிழர் முகாமை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டுமென்பது அம் மக்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக