இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

15 பிப்ரவரி, 2009

நடராசர் கோயில் நிர்வாகமும் மக்கள் எதிர்பார்ப்பும்





சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகப்பொருப்பு நீதிமனற தலையீட்டால் தீட்சிதர்களிடமிருந்து தமிழக அரசுக்குக் கைமாறியிருக்கிறது.கோயிலை யார் நிர்வகிப்பது என்பதில் காலகாலமாக சிக்கல் இருந்து வந்திருக்கிறது என்பதை கோயில் வரலாறு நமக்குச் சொல்கிறது. அரசர்களிடமிருந்த நிர்வாகப் பொருப்பினை கோயிலுக்கு பூசை செய்பவர்கள் சூழ்ச்சியால் கைப்பற்றிக்கொண்டனர். அரசுஅதிகாரிகள் கோயிலை நிர்வகித்ததற்கும், அதில் சிக்கல் எழும்போது அரசன் தலையிட்டு நிர்வாகத்தை ஒழுங்கு செய்தான் என்பதற்கும் ஆதாரமான கல்வெட்டு கோயில் வளாகத்தில் உள்ளது. மேலும் கல்வெட்டு ஆய்வாளர் செ.இராசு குறிப்பிடும்போது 1610ஆம் ஆண்டு கும்பகோணம் சிவப்பிரகாசரும்,1684 இல் தில்லை சிற்றம்பலத் தவமுனியும், 1702 இல் பாதபூசை அம்பலத்தாடுவாரும், 1711 இல் தில்லை காசி தம்பிரானும் கோயிலை நிர்வகித்ததாகக் குறிப்பிடுகிறார். 17 ஆம் நூற்றாணடில் பீசப்பூர் சுல்தான் படையெடுப்பினால் சிலகாலம் பூசை நின்றுபோனதோடு கோயில் நிர்வாகமும் சீர்குலைந்தது. 18 ஆம் நூற்றிணடில் நடைபெற்ற கர்நாடகப் போர்களின் போது படைப்பிரிவுகள் தங்குமிடமாகவும் இக்கோயில் பயன்பட்டிருக்கிறது. அதன் காரணமாக வெற்றி பெற்றவர்களால் கோயில் கைப்பற்றப்பட்டது. 1753 இல் மராத்தியர்களும் பிரஞ்சுக்காரர்களும் இணைந்து கோயிலை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றினர். 1760 இல் ஆங்கிலத் தளபதி மேசர் மான்சன் திரும்பக் கைப்பற்றினார். 1780 இல் ஐதரலி சிதம்பரம் கோயிலைக் கைப்பற்றி தம் படைகளை அங்கே தங்கவைத்தார். இப்போர்க் காலங்களில் கோயிலில் முறையான வழிபாடு நடைபெறாமல் போனதோடு கோயில் நிர்வாகமும் வலுவிழந்துபோனது. இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது எனவே அவர்களின் வழித்தோன்றல்களான பிச்சாவரம் என குறிப்பிடப்படும் பித்தர்புரம் பாளையக்காரர்கள் இக்கோயிலை நிர்வகித்து வந்தனர் அப்போது கோயில் சாவி பித்தர் புரத்திலிருந்து காலையில் பல்லக்கில் வைத்துக் கொண்டுவரப்பட்டு பூசைமுடிந்து இரவு மீண்டும் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு நாளும் சாவி வரும்வரை தீட்சிதர்கள் கோயில் வாசலில் காத்துக்கிடந்தார்கள். பின்னர் பிச்சாவரம் பாளையக்காரர் கோயில் சாவியை தீட்சிதர்களே வைத்துக்கொண்டு பூசையை சரியாகச் செய்யுமாறு பணித்திருக்கிறார். இக்காலகட்டத்தில்தான் அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்தான் பூசைசெய்யவந்த தீட்சிதர்கள் கோயில் நிர்வாகத்தை மெல்ல மெல்ல கைப்பற்றியிருக்கவேண்டும். இது ஒருபுறமிருக்க வழிபாட்டு முறைகளில் பல மாற்றங்களை இதற்கு முன்பே தீட்சிதர்கள் செய்திருக்கின்றனர். சிவபெருமான் 'தென்னாடுடைய சிவன்' எனக் குறிப்பிடப்படுகிறார். சிவ ஆகம முறைப்படிதான் நடராசருக்கு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லா சைவக்கோயில்களிலும் பாடப்பட்ட தேவாரம் முழுவதும் சிதம்பரம் நடராசர் கோயிலில்தான் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. ஓலைச்சுவடியில் இருந்தால் தேவாரம் அழிந்துவிடும் என்று கருதிய முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் நரலோக வீரன் காலிங்கராயன் அவற்றை செப்பேடுகளில் பதித்து சிதம்பரம் கோயில் சிற்றம்பலத்தில் வைத்தான் (சிற்றம்பலம் எனும் சொல்லே சிதம்பரம் என்றாயிற்று) என்ற செய்தி முத்திறந்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு ஒத்தமைத்த செப்பேட்டின் உள் எழுதி-இத்தலத்தில் எல்லைக் கிரிவாய் இசை எழுதினான் கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தே சென்றுஎன்று கல்வெட்டில் குறிப்பிடப்ட்டுள்ளது. இப்படி நம் தமிழ் மன்னர்கள் தேவாரத்தை பாதுகாத்து வைத்த இடத்திலேயே இன்று அதனைப் பாட இயலாத சூழல் ஏற்பட்டதனால்தான் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் கடந்த பத்து ஆண்டுகளாகப் போராடினார். இதற்கும் முன்பு இதே கோரிக்கைக்காக தமிழ்காப்பணி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் பேராசிரியர் மெய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது அக்கோரிக்கையை அப்போதைய அரசு கண்டுகொள்ளாததனால் குடமுழுக்கு வேள்வித் தீயில் வீழ்ந்து மாய்வோம் என இறுதி எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய நீண்ட போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையத் தலைவர் வழக்கரிஞர் ராசு ஒருங்கிணைப்பில் தமிழ்தேச பொது உடைமைக் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் , மக்கள் கலை இலக்கியக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராடி வெற்றி பெற்றதன் விளைவாக இன்று கோயில் நிர்வாகம் அரசின் கைக்கு வந்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மக்கள் என்னநினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்வதற்காக ஒரு சிலரைச் சந்தித்தோம்.அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை முன்னாள் தலைவரும் இந்திய மக்கள் சக்தி இயக்கத்தின் இந்நாள் தலைவருமான பேராசிரியர் அ.சண்முகம் கூறும்போது கோயில் சொத்துகள் அடையாளம் கண்டு மீட்கப் படவேண்டும், இதுவரை இக்கோயிலையே நம்பி வாழ்ந்துவிட்ட தீட்சிதர்களின் மறுவாழ்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். கோயிலுக்கு 918 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதில் 466 ஏக்கர் மட்டுமே ஏனொ தனோவென்று குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கரிஞர் சி.ரமேசு நடராசர் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றதன் மூலம் சிதம்பரத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது கருமாரியம்மன் கோயில் வருமானத்தில் தான் கலைக்கல்லூரி உருவானது. தீட்சிதர்களிடம் நிருவாகப் பொருப்பு இருந்த போது எவ்வளவு வருமானம் வந்தது என்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டார். கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றது சரிதான் ஆனால் எல்லா கோயில்களையும் நிர்வகிப்பதுபோல் நடராசர் கோயிலை நிர்வகிக்கக்கூடாது, வழிபாட்டு முறையில் அரசு தலையிடக்கூடாது என்று தமிழ்நாடு வைணவ சபை சிதம்பரம் பகுதி துணைத்தலைவரும் பாரதிய சனதாக் கட்சியின் மாவட்டப் பொருளாளருமான கோபாலகிருட்டிணன் கருத்து தெரிவித்தார். தமிழ்தேசப் பொது உடைமைக் கட்சி கி.வெங்கட்ராமன் கூறும்போது எங்களுக்கு வழிபாட்டு முறையில் நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழ் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் போராடினோம் இனி எத்தகைய வழிபாட்டு முறை தொடரவேண்டும் என்பதை பக்தர்கள்தான் முடிவு செய்யவேண்டும் அதற்காக பக்தர்கள் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றார். பக்தர்கள் யாரும் இதற்காகப் போராட முன்வரவில்லை நாத்திகர்கள்தான் போராடுகின்றனர் என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு. பக்தர்களுக்கு உரிய உரிமையைக் கொடுத்தால் நாங்கள் எதற்காகப் போராடப் போகிறோம் என்றார் தமிழ் தேசப் பொது உடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் சிவப்பிரகாசம். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அரசு கோயில் நிர்வாகத்தை நடத்துமா? நன்றி; தமிழ் ஓசை-களஞ்சியம்

1 கருத்து:

  1. //இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது எனவே அவர்களின் வழித்தோன்றல்களான பிச்சாவரம் என குறிப்பிடப்படும் பித்தர்புரம் பாளையக்காரர்கள் இக்கோயிலை நிர்வகித்து வந்தனர்//
    உண்மையான சோழர்களின் வழிவந்த பிச்சாவரம் பாளையக்காரர்கள் வன்னியர் தான் என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்..இவர்களை பற்றி மேலும் குறிப்புகள் கிடைக்குமா??


    இவர்களை முன்னிறுத்தி ஏதேனும் நூல் உள்ளதா அய்யா??

    பதிலளிநீக்கு