இரத்தின புகழேந்தி நூல்கள்

இரத்தின புகழேந்தி நூல்கள்
RATHINA PUGAZHENDI BOOKS

3 மே, 2009

மண்ணை இழந்தவன் மானத்தை இழந்தவன்.





உழவர்கள் தங்களின் விளை நிலங்களை வீட்டு மனைகளுக்காகவும் பொருளாதார மண்டலங்களுக்காகவும் இன்று இழந்து வருகின்றனர்.அந்த நிலங்கள் அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல மனித உறவுகளைப் போல் அவைகளும் உறவுகள்தாம் அவர்களுக்கு. மனிதர்களைப் பெயர் சொல்லி அழைப்பதைப் போல் அவர்கள் நிலங்களையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். பண்டைத்தமிழர்கள் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைகளாகப் பாகுபடுத்தினர். மருத நிலமான வயல் வெளிகளுக்கு பட்டா எண் கொடுக்கப்பட்டு இந்த எண்ணுடைய நிலம் இன்னாருடையது என்ற தகவல்களை அரசு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நில வரி வசூல் செய்யப்படுகிறது. இப்பட்டா எண்கள் பதிவேடுகளில் மட்டுமே உள்ளன. மக்கள் பயன்படுத்துவதில்லை அன்றாட நடைமுறையில் நிலங்களைக் குறிப்பிடுவதற்கு தாங்கள் வைத்த பெயர்களையே பயன்படுத்துகின்றனர். இப்பெயர்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு காரணம் உள்ளது. மண்ணின் தன்மை, நிலம் உள்ள திசை, அங்குள்ள தாவரங்கள், நிலத்திற்கு அருகிலுள்ள இடங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நிலங்களுக்கு பெயர் சூட்டப்படுகிறது. மம்பாடு, இறங்காடு, பொட்டங்காடு, கருப்பேரி, களர், செம்பிடுப்பு, கல்லடிகுட்டை, கரையாம்பட்டி ஆகியன மண் அடிப்படையில் தோன்றிய நிலப் பெயர்களாகும். இவை மண்ணின் தன்மைகளை மட்டுமல்லாமல் அங்கு வாழும் மக்களின் பண்பாட்டையும் உணர்த்துகின்றன. பொட்டங்காட்டில் வாழும் மக்களை பொட்டங்காட்டான் என்றும் காட்டுப்புறத்தான் என்றும் குறிப்பிடுவர் காட்டுப்புறத்தான் மோட்டுப்புறத்தான் முட்டாயி கடைய மொறைக்கப்பாத்தான் என்ற பழமொழியும் நிலப்பெயரின் அடிப்படையில் தான் தோன்றியிருக்கவேண்டும். திசைகளின் அடிப்படையில் நிலங்களுக்குப் பெயரிடுவதும் பல ஊர்களில் மரபாக உள்ளது. கீழவெளி, மேலவெளி, வடக்குவெளி, தெக்குவெளி என்பன இதற்குச் சான்றுகளாகும். வெளி என்பதற்கு பதில் காடு என்று அழைப்பதும் உண்டு. விளை நிலங்களோடு வாழிடங்களையும் சேர்த்து திசைகளின் பெயரால் கீழசீமை, மேலசீமை, வடக்கு சீமை, தெக்கு சீமை எனக் குறிப்பிடுவர்.கிழக்கும் தெற்கும் நாகரீக பகுதிகளாக நாட்டுப்புற மக்களால் நம்பப்படுகின்றன. தற்போது நிலத்திலுள்ள தாவரங்களின் பெயராலும், ஒருகாலத்தில் அந்த நிலத்தில் சிறப்பாக விளைந்த தாவரங்களின் பெயராலும், வயல் வரப்புகளிலுள்ள தாவரங்களின் பெயராலும் நிலங்கள் அழைக்கப்படுகின்றன.கம்பங்காடு, கருப்பங்கொல்லை, கத்திரிமேடு, அவுரிகுட்டை, சோளகாவெளி, பூந்தோட்டம், எட்டுபுளி, திரிகடம்பு, மாங்குட்டை போன்ற நிலப்பெயர்கள் தாவரங்களினடிப்படையில் சூட்டப்பட்டவையாகும். இவற்றின் மூலம் நம் உழவுத் தொழிலில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நாம் உணரலாம். விளை நிலங்களுக்கு அருகிலுள்ள இடங்களின் பெயரால் நிலங்களைக் குறிப்பிடுவதும் உண்டு. அம்மன்கோயில் மேடு, வீரன்கோயில் துண்டு, மணியங்கோயில் திட்டு, காட்டேரியம்மன் ஓட்டம், களத்துமேட்டு கொல்ல, பெரியேரி வெளி, ஊர்வாரி, ஆத்தம்படுவை போன்றவை இவ்வகையில் அடங்கும். நிலத்தைக் குடும்பச் செலவுக்காக வேறு ஒருவரிடம் விற்றாலும் அந்த நிலம் விற்றவரின் பெயராலேயே அழைக்கப்படும். நோட்டக்காரன் கொல்லை, மணியாரங்கொல்ல, நாட்டான் கொல்ல என்பன இதற்கு சான்றுகளாகும். நில உரிமையாளர்களாக இருந்த போது நோட்டக்காரர், மணியக்காரர், நாட்டார் என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர்கள் நிலத்தை இழந்ததும் அன் விகுதி பெற்று மரியாதையையும் இழக்கின்றனர்.தனக்கான மண்ணை இழந்தவன் மானத்தை இழந்தவனாகிறான். இது போன்று ஒவ்வொரு ஊரிலும் நிலங்களுக்கு மக்கள் சூட்டியிருக்கும் பெயர்களை ஆராய்ந்தால் அப்பகுதி மண்ணின் தன்மை, நிலத்தடி வளம், அங்கு விளையும் பயிர் மற்றும் மர வகைகள் காலந்தோறும் வேளாண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதற்கான காரணங்கள், அங்கு வாழும் மக்களின் பண்பாடு, நாகரிகம், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு கூறுகளை அறிந்து கொள்ள இயலும். இத்தகைய வரலாறுகள் தெரியாமல் பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நிலங்களை வேட்டையாடி வரும் மனை வணிகர்களைப் பார்த்து நிலமென்னும் நல்லாள் மெல்ல நகுவாள். மண்ணின் மீது மனிதர்களுக்குத்தான் எத்தனைப்பற்று. ஊரும் உலகமும் இதற்காக சந்தித்தப் போர்கள் எத்தனை எத்தனை ! காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.

5 கருத்துகள்:

  1. ஐயா அருமை என்ன சொல்வது என்றே தெரியவில்லை தமிழும்,மண் சார்ந்த நிகழ்வுகளும் நிரம்ப பிடிக்கும் ..நீங்கள் நிருபித்துவிட்டீர்கள் ..நன்றி தொடர்ந்து எழுதுங்கள் ...ஒரு சின்ன சந்தேகம் ஊர்வாரி என்றால் என்ன எதை குறிப்பிடுகிறார்கள் ?
    ஊர்வாரி - ஊர்ச்சலதாரை. என்று உலவியில் பார்த்தேன் புரியவில்லை ..என்னை மன்னித்துவிடுங்கள் உங்கள் கட்டுரையை உங்கள் அனுமதி இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு தினமணி தளத்தில் பதிவு செய்துவிட்டேன் ...
    குமார்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே உங்கள் மடல் மிகிழ்ச்சி அளிக்கிறது
    ஊர் வாரி என்றால் ஊருக்கு அருகில் உள்ள பள்ளமான நிலம் வாரி என்றால் பள்ளம் என்று பொருள். தினமணி தளத்தில் பதிவுசெய்த்து பரவாயில்லை அந்த தளத்தின் இணைப்பினை எனக்கு அனுப்புங்கள்
    நன்றி
    அன்புடன்
    புகழ்

    பதிலளிநீக்கு
  3. நன்றி புகழ் ஐயா
    உங்களோட சின்னவன் தான் பெயர் சொல்லியே விளிக்கவும் ..நீங்கள் ஏன் தற்போது எழுதுவது இல்லை ..ஊர்வாரியின் அர்த்தம் தேடி உங்கள பக்கத்துக்கு வந்தேன் அருமையாக உள்ளது ...நன்றி ..கீழே சுட்டியை காணலாம் ..நன்றி குமார்


    http://dinamani.com/edition/Blogstory.aspx?&SectionName=BlogNews&artid=276763&SectionID=184&MainSectionID=184&SEO=seo&Title=

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் குமார் இரண்டு வலைப்பூ உள்ளன ஒன்று அடிக்கடி புதுப்பிக்கப் படுகிறது மற்றொன்று கொஞ்சம் அவகாசம் தேவைப்படூகிறது விரைவில் புதுப்பிப்பேன் நன்றி வணக்கம்
    அன்புடன்
    புகழ்

    பதிலளிநீக்கு